வெள்ளி, 31 டிசம்பர், 2010

உழைப்பாளருக்கு உதவு

காலை மாலை காட்டில் மாடாய்
வேலை செய்வோர் ஏற்றம் காண
நாளும் செய்வீர் நன்று!

(ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
"நற்றமிழ்" 15-05-2010)

உலகம் நம் உள்ளங்கை மேல்!

அறிவியல் வானியல் ஆன்மிகம் ஆடல்
பொறியியல் ஆண்பெண் பொருத்தம் - முறையாய்ப்
பலகற்றுத் தேர்ந்துநற் பண்டிதர்கள் ஆனால்
உலகம்நம் உள்ளங்கை மேல்!

(வெண்பா விருந்து - "முல்லைச்சரம்" - ஜூன் 2010)

கல்வி

திருத்தமாய்க் கற்றால் தெளிவு பிறக்கும்
பெருத்திடும் ஐயமெலாம் தீரும் - பொருத்தம்
இசைக்கென்றும் வேண்டுமாம் என்பதுபோல் கல்வி
நசையுடன் கற்றல் நலம்!

(வெண்பாப் போட்டி 109- திருக்குறள் அதிகாரம் 51 இல்
பயின்றுவரும் புளிமாச்சீர்களில் ஒன்றனை மூன்றாம்
சீராகக் கொண்டு எழுதியது- "பன்மலர்" -ஜூன் 2010)

உழைப்பாளி வாழ்வை உயர்த்து!

நமக்காகப் பாடுபடும் நல்லவர்கள் நம்மைப்போல்
சமமாக வாழ்தல் சரியாம் - சுமையாய்
இழைக்கும் கொடுமைகளை இன்னல்களை நீக்கி
உழைப்பாளி வாழ்வை உயர்த்து!

(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-மே 2010)

கோவைக்குப் போகலாம் வா!

செம்மொழிக்கு மாநாட்டைச் சீராய் நடத்துகின்றார்
எம்தமிழர் பாரெல்லாம் ஏத்துகின்றார் - அம்மம்மா
நாவுக்கும் நற்செவிக்கும் நல்விருந்தைச் சேர்ந்தளிப்பார்
கோவைக்குப் போகலாம் வா!

(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-சூன் 2010)

புதன், 29 டிசம்பர், 2010

யானைக் குளியல்

ஒன்றுக்கு மூவர் ஒருகுளியல் போடுதற்கு
நின்றே களித்திடும் நீள்கொம்பன் - நன்றாய்ச்
சறுக்கு மரமாடச் சாய்ந்துகை நீட்டிப்
பொறுப்புடன் நீரா டிடும்!

(யானையை மூன்றுபேர் சேர்ந்து குளிப்பாட்டுவது
போன்ற ஓவியத்திற்குப் பாட்டு. ஓவியப்பாட்டு-24
உரத்தசிந்தனை - டிசம்பர் 2007)

வெள்ளி, 17 டிசம்பர், 2010

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

பல்கலை வித்தகர் பயின்றது சட்டம்
தொல்லைய ரானார் வெள்ளைய ருக்கே
நூல்களைச் செல்வமாய் மதித்த அறிஞர்
கால்கோள் கண்டவர் தொழிற்சங் கத்தில்
சிறைபல சென்றவர் குறைகளை எதிர்த்து
நிறைதரும் பொதுவுடை மையெனும் கருத்தர்
சிந்தனைச் சிற்பிசிங் கார வேலர்
இந்த மண்ணில் பிறந்ததெம் பெருமையே!

(ம.சிங்காரவேலர் 150-ஆவது பிறந்த நாள் 18.2.2009
"செவ்வானம்"-பாமாலை- கவிதைத் தொகுப்பு-மே 2009-
பாவலர் அசோகா சுப்பிரமணியன்,புதுச்சேரி)

வியாழன், 16 டிசம்பர், 2010

விண்ணப்பம் ஏற்றிடுவாய்!

பொற்பாதம் நெஞ்சமுறப் பொழுதெலாம் உனையெண்ணிப்
புலம்பிடும் சிறிய பிள்ளை
புடவையெழில் சேயெனவே போர்த்தியருள் செய்திட யான்
புண்ணியம் என்ன செய்வேன்?

இற்றுவிழும் இடையுடனே ஈசனுடன் நடனமிடும்
என்னம்மை நின்கருணையால்
இச்சை சுகம் உறவு பகை எனும் பெரிய பந்தத்தை
என்றைக்கு உதறி நிற்பேன்?

சொற்கேட்டு சம்பந்தன் சுடரறிவைத் தூண்டியநற்
சோதியே தாய் நெஞ்சமே
சொல்லொணாத் துயர் நெஞ்சைச் சுக்கலாய் ஆக்குமுனம்
சுகவிரல்க ளால்வருட வா!

கற்றவர்கள் சங்கமிடும் கவின்மதுரை மாநகரில்
கண்கொள்ளாக் காட்சி நீயே
கவனமுடன் இச்சிறுவன் விண்ணப்பம் ஏற்றிடுக
கருணை மீனாட்சி உமையே!

("உரத்தசிந்தனை" 26-ஆம் ஆண்டுமலர், பிப்ரவரி 2010)

புதன், 15 டிசம்பர், 2010

தாய்மை உளமகிழுந் தான்!

கருவில் சுமந்து கணக்கற்ற இன்னல்
வருத்தினும் தாய்மனம் வாடாள் - உரமுடன்
சேயின் நிலையுர்ந்து செம்மாந்து நிற்குங்கால்
தாயின் உளமகிழுந் தான்!

("உரத்த சிந்தனை" - செப்டம்பர் 2010, வெண்பாப் போட்டியில்
முதல் பரிசு பெற்றது.)

பாரதி நெய்துவைத்த பா!

மானத்தைக் காக்கும் மறக்குணத்தை ஊட்டிடும்
தானம் தவம்பற்றி ஓதிடும் - பேனாவோ
ஊரறியும் தெய்வமதன் ஓரெழுத்தும் தெய்வமெனும்
பாரதி நெய்துவைத்த பா!

("தமிழரின் மனித நேயம்" செப்டம்பர், 2010)