ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

உத்தமனா நீ?

குள்ளனாகச் சென்றந்த மாவலியிட மிரந்து
             கேட்டனை மூவடியில்மண்
    குறையொன்று மிலாதவன் கொடுக்கவும் வஞ்சனாய்க்
             கொற்றவன் சிரமழுத்தினாய்

கள்ளனென மறைந்திருந்து வாலியின் மார்புதனைக்
            கணையால் துளைத்திட்டனை
     கர்ணனின் உயிரனைய தருமத்தை யாசித்துக்
            காலனுக் கிரையாக்கினை

உள்ளமெலாம் அடியவர்கள் உனையே நினந்துருகும்
            ஒப்பற்ற மாமாயனே
     உன்தகுதிக் கிவையெலாம் ஒக்குமோ கண்ணனே
             உத்தமன் நீயாவையோ?

எள்ளிநகை யாடிடும் மானிடா மெய்மையும்
            வாய்மையாம் நன்மைதரின்
      இவ்வுலகத்தில்  தருமத்தை நிலைநாட்ட வேறுவழி
             எனக்கொன்றும் தோன்றவிலையே!

                                                                - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது:'உரத்த சிந்தனை" 30-ஆவது ஆண்டு மலர்.
ஆண்டுவிழா நிகழ்வு:9-3-2014.சந்திரசேகர் திருமண மண்டபம்
மேற்கு மாம்பலம், சென்னை.33)
         


கல்விச் சாலை

இளமையிலே பயின்றிட்ட என்னைப் போன்றோர்
         எழுத்தறிவைக் கற்பிக்கும் பள்ளிக் கூடம்
உளம்மகிழ மேற்படிப்பைத் தருங்கல் லூரி
        உற்சாக  விளையாட்டோ டெவ்வி டத்தும்
களவற்ற மனக்கொண்ட பேரா சான்கள்
        கட்டுப்பாட் டொழுக்கமொடு கல்வி சொல்லி
அளவற்ற செல்வத்தை அள்ளித் தந்தார்
       அதனாலே செல்வங்கள் பலவும் பெற்றோம்!

கல்விக்கூ  டம்சிலரின்  காமக் கூடம்
      காசுபணம் பறிப்போரின் கொள்ளைக் கூடம்
பல்விதமாய் அரங்கேறும் வன்முறைகள்
     பாலியலில் பலவழியில் துன்புறுத்தல்
சொல்லிக் கொடுக்கின்ற குருவும் பாடம்
       சொல்லவந்த மாணாக்கர் பேதம் இன்றி
எல்லாத்தீச் செயல்களையும் புரிந்து வாழும்
        இடமாக மாறிற்றோ இந்நாள் ஐயோ!

கல்வியதன் ஒற்றிழந்தால் கலவி யாகும்
        களியாட்டம் ஆடஅல்ல கல்விக் கூடம்
நெல்விதைத்தால் நெல்கிடைக்கும் வயலில் ஆங்கே
       நிறைநிறையாய்ப் புற்களுமே முளைப்ப துண்டு
கல்லியதை முளையிலேயே பிடுங்கி விட்டால்
      களமெல்லாம் தானியங்கள் குவிந்து நிற்கும்
நல்லவழி காட்டுதற்கே கல்விச் சாலை
      நன்றாக இதனையவர் உணர்தல் வேண்டும்!

                                                                  - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "கவிதை உறவு". டிசம்பர் 2013. பக்கம்.16)

ஏன் படைத்தேன் ?

எதுவேண்டும் என்றிந்த மானு டத்தை
     இறைவாநீ படைத்திட்டாய் என்றே என்னை
மெதுவாக வினவுகின்ற மனிதா  கேளாய்
    மேதினியில் உத்தமனாய் மனிதன் தோன்றி
அதிசயிக்கும் அறிவுமிக தயையும் கூடி
    அறத்தாலே சேர்த்தபொருள் அனைத்தும் ஈந்தே
எதுவரினும் மாறாநல் மனத்தா னாகி
     எனைபோன்ற இறையெனநான் உயர்த்து தற்கே!

                                                          - அரிமா இளங்கண்ணன்

(16-1-14 இரவு 7.50 மணி, வீடு. "கவிதை உறவு" இதழில்
 ஆசிரியர் ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியதற்கு
மறுமொழியாக எழுந்த கவிதை.)



சனி, 23 ஆகஸ்ட், 2014

தாலாட்டு

ஊரார்தாம் மலடியென்றே தூற்றா வண்ணம்
     உற்றவர்கள் மனமகிழப் பெற்ற சேயைச்
சீராட்டிச் சிணுங்கிடுமுன் ஓடிச் சென்றே
    சிறுபசியும் தானுணர்ந்து மார்ப ணைத்துப்
பாராட்டிப் பலர்வாழ்த்த நல்ல நாளில்
    பாங்குடனே தொட்டிலிட்டுப் பேரும் வைத்தே
ஆராரோ ஆரிரரோ என்றே அன்னை
    அருமையுடன் தாலாட்டித் தூங்கச் செய்வாள்!

கருவிலேயே தாய்குரலைக் கேட்ட பிள்ளை
    காதினிக்கத் தாலாட்டுப் பாடும் போதில்
இருவிழிகள் தாமயரத் தாம ரைப்பூ
    இரவினிலே கூம்புதல்போல் உறக்கம் கொள்ளும்
அருகினிலே தாயிருந்து பாடும் பாட்டால்
    அழகுடனே முறுவலிக்கும் கனவு கண்டே
ஒருகாலை மேல்தூக்கி மடக்கி வைத்தே
     ஒயிலாகத் தூங்குவதோர் அழகின் எல்லை!

தான்பட்ட இன்னல்களைக் கதைபோல் சேர்த்துத்
     தாலாட்டுப் பாடிடுவாள் அத்தை மாமன்
தேன்சொட்டும் மலர்ச்செண்டால் அடித்தார் என்றே
     தித்திக்க உறவுசொல்லிப் பாட்டி சைப்பாள்
மீனாட்சி சிவன்முருகன் இராமன் தெய்வ
    மேன்மைகளைத் தாலாட்டில் விளக்கிச் சொல்வாள்
ஈன்றவளின் இன்னிசையே தாலாட் டாகும்
     இல்லத்தில் தாய்க்குலமே ஒலிக்கச் செய்வீர்!
                                             
                                                    - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது: "தமிழர் உலகம்" வேலூர். நவம்பர் 2013.விஜய ஆண்டு,
ஐப்பசி மாதம். பக்கம்,18-ஒஎ.)


 

காமராசர்

உலகத்தில் ஒப்பற்ற தலைவரோர் ஆயிரம்
           ஆண்டினில் அவதரிப்பார்
   உண்மையும் எளிமையும் மனிதநல் நேயமும்
           உற்றகுண மாய்த்தோன்றுவார்

சிலகாலம் ஆண்டாலும்  நாட்டுமுன் னேற்றத்தை
          சிரசிலே மேற்கொள்ளுவார்
   செய்கின்ற தியாகமோ கணக்கிலடங் காதவர்
          சிறந்தநற் கருமவீரர்

நிலையான புகழுடைய விருதுநக ரில்பிறந்த
         சிவகாமி யம்மைமகனே
   நிர்க்கதியா யுழன்றமிக தாழ்த்தப்பட் டோர்களின்
         ஏழைப்பங் காளரானார்

அலையாத மனதுடன் ஆசைகள் இல்லாமல்
         அருந்தமிழ் நாட்டையாண்டார்
   அதுபெரிய பொற்காலம் என்றெவரும் போற்றிடும்
         அவரேநம் காமராசர்!

                                                   - அரிமா இளங்கண்ணன்

(14-7-2013 ஞாயிறு இரவு 7.45. வீடு)
(15-7-13 காமராசர் பிறந்த நாள் விழா
முகப்பேறு அமுதா மேல்நிலைப் பள்ளியில் சிறப்புச்  சொற்பொழிவாற்றும்போது வாசித்த கவிதை.)

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வெண்பாப் போட்டி வாழ்த்து

மின்னல் தமிழ்ப்பணிக்கும் மேன்மையுறு வெண்பாவில்
கன்னல் சுவைதந்த பாவலர்க்கும் - இன்னும்
எழுதிடு வோர்க்கும் இளங்கண்ணன் நல்கும்
பழுதிலா வாழ்த்துப் பரிசு!

                                                  - அரிமா இளங்கண்ணன்

("மின்னல் தமிழ்ப்பணி" நடத்திய வெண்பாப் போட்டியில் நடுவராக
இருந்து எழுதியது.வெளியானது.நவம்பர் 2013 - கார்த்திகை 2044)

எப்போதும் வேண்டும் எனக்கு

ஆய்ந்தறிந்து நூல்கற்க அன்புடன் சேவைசெய
நோயற்ற வாழ்வும் பொருள்வளமும் - தேய்வின்றி
முப்போதும் நல்லுணவும் மூப்பில்லா உள்ளமும்
எப்போதும் வேண்டும் எனக்கு.

                     - அரிமா இளங்கண்ணன்

(7-5-2014 மாலை 7.23. லாஸ் ஏஞ்சல்ஸ்)

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

முதலும் முடிவும் (செருப்பு - விளக்குமாறு)

செருப்பில்லாக் கால்களுடன் சென்றிட்டாள் வேலை
உருப்படியாய்க் கிட்டவில்லை ஒன்றும் - நெருப்பாய்
எரியும் வயிற்றுக்காய் எப்பணியும் செய்ய
வரிந்தெடுத் தாள்விளக்கு மாறு.

                                           - அரிமா இளங்கண்ணன்

(19-8-2014 காலை 11.29. லாஸ் ஏஞ்சல்ஸ்)

என் இனிய தேசம்!

என்னினிய தேசத்தில் எல்லோரும் ஒன்றிணைந்தே
இன்பமுடன் வாழ இடமளிப்பாய் - புன்மைமிகு
எண்ணங்கள் மாய்ந்தொழிந்தே எல்லாம் நலம்பெறவே
கண்ணசைப் பாய்காளித் தாய்.

                                                      - அரிமா இளங்கண்ணன்
(14-8-2014 பிற்பகல் 2.10. லாஸ் ஏஞ்சல்ஸ்)

பராசக்தி

சிங்கம்தன் பின்புறத்தே சீற்றமுறச் சூலமுடன்
செங்கையில் வாள்கதையும் செந்தீயும் - அங்கமெலாம்
பேரழகும் நற்கருணை பொங்குமிவள் எம்குலத்தின்
சீரருளும் தெய்வமாம் செப்பு.
                                                        - அரிமா இளங்கண்ணன்
(சீர்பரா சக்தியெனச் செப்பு. - 15-8-2014 வெள்ளி பிற்பகல் 12.10
லாஸ் ஏஞ்சல்ஸ்)

கல்லுக்குள் ஈரம்

கல்லடி பட்ட நாய்க்குட்டி
  கண்டான் கசாப்புக் கடைக்காரன்
செல்லமாய் எடுத்தே அணைத்திட்டான்
  சிவப்பாய் ரத்தம் கைகளிலே
மெல்லக் கண்ட நாய்க்குட்டி
  மெதுவாய்க் கைகளை நக்கித்தன்
சொல்ல இயலா நன்றியினைச்
  சுகமாய் உணர்த்தி மகிழ்ந்ததுவாம்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
( கவிஞர் மீ.விசுவநாதன். சந்தவசந்ததில் எழுதிய வசன கவிதையின்
 மரபுக் கவிதை.13-8-2014 நண்பகல் 12 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)

ஆடிப் பூரம்

ஆடிப்பூ ரத்தில் அவதரித் தின்னிசை
பாடினாள் நற்றமிழ்ப் பாவையை - சூடினாள்
பூமாலை மாயவன் பொன்மணித் தோள்களில்
நாமெலாம் போற்றவே நன்று.

                               - அரிமா இளங்கண்ணன்

(29-7-2014 திங்கள் பிற்பகல் 3.17 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆடிப்பூரம் 30.7.14)

ஆடி அமவாசை

ஆடிமா தத்தில் அமாவாசை நன்னாளில்
கூடி இருந்துநாம் கும்பிட்டு - நாடியே
முன்னோர் தமைநினந்து மூழ்கிநீ ராடினால்
எந்நாளும் நன்றாம்  நமக்கு.

                                              - அரிமா இளங்கண்ணன்

(26-7-2014 சனி  காலை 11.25 மணி.-ஆடி அமாவாசை. லாஸ் ஏஞ்சல்ஸ்)

ஆடி வெள்ளி

ஆடிவெள் ளிக்கிழமை அம்மனது கோயிலைத்
தேடியே சென்று தரிசித்தால் - ஓடிவிடும்
தீராத நோய்நொடிகள் தேக பலம்கூடும்
சீராக வந்திடும்செல் வம்.

                                              - அரிமா இளங்கண்ணன்

(எழுதியது:18-7-2014 ஆடி முதல் வெள்ளி. இரவு 10.27 மணி)

மாரியம்மன் - 6

எல்லோரும் நின்றொதுக்க ஏதும் புரியாமல்
சொல்லிழந்து நிற்கையிலே சூலமுடன் - எல்லையிலா
ஆனந்தம் தந்தருளும் அற்புதமே எக்காலும்
யானடிமை என்மாரித் தாய்.

                                 - அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 10-6-2014 செவ்வாய், அதிகாலை 3.30 மணி)

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சொல்

தொழத்தக்க எம்தமிழர் எழுத்தும் தெய்வம்
       தூரிகையும் வணங்குகின்ற தெய்வம் என்பார்
எழுத்துக்கும் சொல்லுக்கும் ஏற்ற வாறே
       எத்துணையோ பொருள்களவை விந்தை யாகும்
அழுத்தமுடன் உச்சரித்தால் காணும் அர்த்தம்
       அதைவிடுத்தால் ஒற்றெழுத்தால் மாறிப் போகும்
பழச்சுவையாய்த் தேன்போன்ற சொற்கள் தம்மில்
       பட்டென்று கொட்டுகின்ற கொடுக்கும் உண்டு!

கண்ணகியின் சொல்லம்பு தீயாய் மாறிக்
      கவின்மதுரை நகரத்தை அழித்த தன்று
திண்ணமிகு வெற்றிகண்ட நந்தி வர்மன்
       தீச்சொற்கள் அறம்பாடத் தீயுள் மாய்ந்தான்
பண்ணிசையில் எழுகின்ற சொற்கள் வானில்
        பறந்துபெரும் மழையினையே தருதல் கூடும்
எண்ணத்தில் விளைகின்ற சொற்கள் எல்லாம்
        இதயத்தை வருடுவதாய் இருத்தல் வேண்டும்!

பேசாத சொற்களுக்குத் தலைவன் நீயே
        பேசிவிட்டால் அதற்கடிமை நீயே ஆவாய்
கூசாமல் பிறர்மீது குறைசொல் லாதே
       குலைகுலையாய்க் கனியிருக்கக் காயுண் ணாதே
நேசமிகு சொற்களுடன் நெருக்கம் கொள்வாய்
        நிகழ்ச்சிகளில் இலக்கியமாய் முழக்கம் செய்வாய்
பாசமுடன் தமிழ்மொழியின் உயர்வைப் பேசிப்
         பார்முழுதும் தமிழோசை பரவச் செய்வாய்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதுகைத் தென்றல்" - ஜூன் 2013. பக்கம்.38 )

தமிழ்ப் பெயர்

அருகிலுள்ள நகராட்சிப் பள்ளி சென்றேன்
      ஆரம்பப் பள்ளியது மாண வர்கள்
வரிசையாக அமர்ந்திருந்து தங்கள் பேரை
      வகுப்பாசி ரியர்சொல்ல எழுந்து நின்றார்
சரியான தமிழ்ப்பெயர்கள் ஒன்றும் காணோம்
      சத்தீஷ் ரோகித் ரமேஷ் ஆர்யா சூர்யா
முருகேஷ் லிங்கேஷ் பிரணவ் ஷக்தி யோகா
      முழுவதும்வாய் நுழையாமல் இன்னும் உண்டு.

பெயர்வைத்தே முன்பெல்லாம் ஒருவர் வாழ்ந்த
       பிறந்திட்ட மாவட்டம் அறிய லாகும்
உயர்விகுதி 'அன்'என்றும் 'அள்'என் றும்தான்
      ஆண்பெண்கள் பெயரெல்லாம் முடிவ துண்டு
வியர்த்திடவே மூட்டைகளைச் சுமப்போர் எங்கும்
      விமானத்தில் பறப்போரும் தம்பிள் ளைக்குப்
பெயர்தமிழில் வைத்திடஏன் தயங்கு கின்றார்
       பிற்காலம் தமிழ்ப்பெயர்கள் மறந்தே போகும்!

                                         - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதுவை பாரதி" - புதுச்சேரி-ஜனவரி 2014-பக்கம்.11 )

மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

ஊழல் மதபேதம் ஓங்கிடும் பெண்கொடுமை
தாழும் நமதுநிலை தான்மாறி - தோழா
அகிலத்தில் எங்கும் அமைதி நிலவி
மகிழ்வென்று பொங்கும் மலர்ந்து?

                            - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை"-வெண்பா விருந்து-07-ஜனவரி 2014. பக்கம்.54 )

ஓவியக் கவிதை

கற்றைக் கூந்தலும் நெற்றிப் பொட்டும்
கண்ணில் சிரிப்பும் இதழில் மலர்ச்சியும்
வெண்பல் முத்தும் வியப்புறு தோற்றமும்
சரச நங்கையோ சதிர்புரி மங்கையோ
'அரஸூ'வின் கைத்திறம் அழகொளிர் கின்றதே!

                                                - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை" ஓவியக் கவிதைப் போட்டி. ஜனவரி 2014. பக்கம்.25 )

தானம்

கையிரண்டு பெற்றதெலாம் உழைப்ப தற்கே
       கண்ணிரண்டு பெற்றதருள் காட்டு தற்கே
பைநிறையச் சேர்த்தபணம் ஏழை யர்தம்
      பசிப்பிணியைப் போக்குதற்கே உதவ வேண்டும்
உய்வதற்கு நீயளிக்கும் தானம் எல்லாம்
     ஒப்பற்ற கடவுளுக்கே முதலில் சேரும்
ஐயிரண்டு திங்களிலே உன்னைப் பெற்றாள்
      ஆனந்தம் கொள்ளும்நற் செயலே தர்மம்!

                                                 - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "புதிய உறவு"-புதுச்சேரி-2014 மார்ச். பக்கம்.19 )

யார் பொறுப்பார்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன்றோர் முன்னர்
        அழகொழுக நடக்கின்ற திரும ணத்தால்
தூணொத்த மகன்பிறந்து பார தத்தைத்
        தூக்கிப்பி டிக்கின்ற பெருமை கொள்வான்
காணக்கண் கூசிடவே ஆணும் ஆணும்
       கட்டிளமைப் பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து
நாணத்தை விட்டுவிட்டுக் கட்டில் மீது
      நடத்துகின்ற கேவலத்தை யார்பொ றுப்பார்?

                                            - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது: "கண்ணியம்" ஏப்பிரல்-2014. பக்கம்.68 )

என் நெஞ்சை ஈர்க்கும் எழுத்து

குறளும் சிலம்பும் குருபரர் ஒளவை
புறமகம் பாரதி கம்பர் - திறல்மிகு
கன்னித் தமிழிலென் பேரன் எழுதுவதும்
என்நெஞ்சை  ஈர்க்கும் எழுத்து!

                              - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது; "முல்லைச்சரம்" மார்ச் 2014. பக்கம் 60 ) 

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

டாக்டர்.பசுபதி (கனடா)

பசுபதி யார்குமரன் ஆற்றுப் படையைப்
பசுபதி யாருரைக்கக் கேட்டேன் - இசைவுடன்
நல்லபல செய்தி நமக்களித்தார் காக்கவே
செல்வ மலைவாழும் சேய்!
                                                                - அரிமா இளங்கண்ணன்

(7-8-204  வியாழன்  நண்பகல் 12.36 மணி. லாஸ் ஏஞ்சலெஸ்)

மாரியம்மன் - 5

என்னை உனக்களித்தேன் என்னுயிரும் ஈந்திட்டேன்
முன்னைப் பெருவினைகள் போக்குவாய் - அன்னையே
உன்னைப்போல் தெய்வமிங் கொன்றுண்டோ மாரியே
என்னைநீ ஏற்றுக்கொள் வாய்!
                                                                      -அரிமா இளங்கண்ணன்

(30-4-2014 காலை 7.15மணி, தாணாத் தெருகோயில் முன்)

மாரியம்மன் - 4

நிர்க்கதியாய் நின்றஎனை நீயுந்தன் பிள்ளையெனச்
சொற்கவிதை பாடவைத்த சுந்தரியே - அற்புதமே
எந்நாளும் உன்பதமே ஏத்திப் பணிசெய்ய
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014 பிற்பகல் 1.20 மணி)

மாரியம்மன் - 3

பசித்திடும் பிள்ளைக்குப் பாலூட்டல் போலப்
புசித்திடச் சோறிடும்பொன் மாரி - நிசியிலும்
என்னுட னேயிருந் தென்னின்னல் போக்குவாள்
அன்னையாம் என்மாரித் தாய்!
                                                                           - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014. பிற்பகல் 1.10 மணி)

மாரியம்மன் - 2

நெடுந்தூரம் ஓடியே நின்னடியார்க் கோயா(து)
இடர்தரும் கேடரைச் சாய்ப்பாய் - சடுதியில்
உன்கால் விரல்களுக் குற்ற சொடுக்கெடுப்பேன்
என்மாரித் தாயேநீ வா!
                                                        - அரிமா இளங்கண்ணன்

(19-9-2012 புதன். இரவு 11.50 மணி-விநாயக சதுர்த்தி)

மாரியம்மன் - 1

எட்டுக் கரத்தழகி ஈசான்ய திக்கழகி
பட்டுத் துகிலழகி பாம்பழகி - வெட்டும்
பகையழகி தீசூழ் புனத்தழகி சற்றே
 நகையழகி என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்

(28-7-2012 சனி. இரவு 9.45 மணி. வீடு)

உமாபதி

உமையும் சிவனும் உலகோர்க் கருள
இமையும் மறந்திடா ராம்.
                                                                  - அரிமா இளங்கண்ணன்
(19-6-2014 காலை 11.14 மணி. லாஸ் ஏஞ்சலெஸ்)

முருகன்

வள்ளிதெய் வானை வலமிடம் நின்றிடத்
துள்ளிவரும் வேலும் துணைநிற்க - கொள்ளை
அழகொழுகும் தோற்றம் அணிமயில் சேயோன்
தொழுவார்க் கருள்புரி வான்!
                                                               - அரிமா இளங்கண்ணன்
(19-6-2014 காலை 10.15 மணி. லாஸ்  ஏஞ்சலெஸ்)

நினது செயல்

நிற்றல் நடத்தல் நினது செயலெனச்
சற்றும் நினைத்திட வேண்டாநீ - கற்றைக்
குழலான் அசைத்திடும் கைப்பாவை யாய்நீ
எழுதல் விழுதல் இயல்பு.
                                                         - அரிமா இளங்கண்ணன்

(2-6-2014 லாஸ் ஏஞ்சலெஸ்)

டாக்டர்.இரா.வ.கமலக்கண்ணன்

பாரதத்துச் சொற்பொழிவைப் பாவலர்யாம் கேட்காமல்
சீரார் அமெரிக்கா செல்லலுற்றொம் - மேராம்
கமலக்கண் ணன்பேச்சு கற்கண்டு போலாம்
எமக்கொரு நாள்சொல்லு வார்.

                                                    - அரிமா இளங்கண்ணன்

( 29-4-2014 செவ்வாய்-காலை 3.45 மணி. வீடு)
(சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் 21 நாட்கள் பாரதம் பற்றிய சொற்பொழிவு)

என்ன சிந்தனை? - (ஒளிப்படக் கவிதை)

பாடம் நன்றாய்ப் படிக்கவோ
        பள்ளியில் முதலாய் நிற்கவோ
ஆடல் பாடல் சிறக்கவோ
        அரிய சொற்பொழி வாற்றவோ
ஓடிப் பரிசை வெல்லவோ
        உயரே வானில் பறக்கவோ
நாடே உன்னைப் போற்றவோ
        நயந்த சிந்தனை எதுவாமோ?

                                                       -அரிமா இளங்கணன்

(13-4-2014-மாலை 5.50 மணி)

என்செய்வோம் உழுதுண்ண?

காடெல்லாம் கட்டிடங்கள் காணாத நீர்ப்பஞ்சம்
போடும் விதைமுளையா மின்வெட்டு - மாடாக
இன்னும் உழுதுண்ண எங்கட்கே ஏதுவழி
என்செய்வோம் சொல்வீர் இனி?

(11-4-2014 இரவு 7.15 மணி. வீடு)
(வெளியானது "உரத்தசிந்தனை" மே 2014)

இரட்டை வெண்பா - (காதற் சிறப்புரைத்தல்)

திருக்குறளில் காதற் சிறப்புரைத்தல் அதிகாரப் பொருளும் , ஏதேனும் ஒரு சீரை இறுதிச் சீராகவும் அகமும், நட்பு பற்றிப் புறமும் அமைந்த இரட்டை வெண்பா.
                                      அகம்
பாலோடு தேன்கலந்த பாங்கான செஞ்சொல்லும்
சேல்விழியும் கொண்ட சிறுநகையாள் - கோல
விளக்கென என்மனக் கோவில்தான் கொள்ளல்
வளைக்கரத் தாள்தன் குணம்.
                                      புறம்
ஒன்றாகத் தின்றுவிட்டே ஊர்சுற்றி நற்பண்பைக்
குன்றிடவே செய்வர் கெடுமதியர் - என்றும்
நிறைகளைப் போற்றியும் நேரல்ல மாற்றக்
குறைசொலல் நண்பர் குணம்.

(9-4-2014 இரவு 9.50 மணி)
(வெளியானது "பன்மலர்"  மே 2014)

பாரதிதாசன்

செறிவான சொற்களினால் சிந்தனையைத் தூண்டி
அறிவை வளர்க்கும்நல் ஆசான் - சிறப்பாய்த்
தமிழ்மொழியின் மேன்மைசொலித் தன்னுரிமை வேட்ட
அமிழ்தனையார் பாவேந்த ராம்.

(23-3-2014. ஞாயிறு. இரவு 7.35 மணி. வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஏப்ரல் 2014)

புதன், 6 ஆகஸ்ட், 2014

இல.கணேசனாருக்கு

தேர்தலில் வெற்றியும் தேடாப் பதவியும்
சீர்மிகவே வந்தும்மைச் சேர்ந்த்திடும் - நேர்மையாய்
என்றும் உதவும் இலகணேச னாருக்கு
நன்றிசொலும் நம்பா ரதம்.

(22-3-2014 பிற்பகல் 2.35 மணி- தென் சென்னைப் பாராளுமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு)

ஒளிப்படக் கவிதை - பாப்பா

பாப்பா பாப்பா கதை கேளு
பாட்டி சொல்லும் கதை கேளு
அப்பா அம்மா சொல் கேளு
அநாதை இல்லம் அனுப்பாதே
தோப்பாய் உறவுடன் இருந்தால்தான்
தொல்லைகள் எல்லாம் தாங்கிடலாம்
"போ பாட்டி" எனச் சிரிக்காதே
பொக்கை வாயது உனக்கும் தான்!

(11-3-2014-இரவு 8.30 மணி. வீடு)

இரட்டை வெண்பா (குறள்.அதிகாரம் 112)

திருக்குறள் அதிகாரம் 112-நலம் புனைந்துரைத்தல்-இல் இடம்பெறும் முதற்சீர்-அகமும். உழவின் பெருமை குறித்துப் புறமும்-இரண்டு வெண்பாக்களும் ஒரே வகையான தளை பெற்றிருத்தல் )

                                 அகம்
அன்னத்தினதூவி அடிக்கூறாம் மாங்கனி
கன்னத்தைக் கண்டே கவன்றிடும் - மின்னல்
கொடியிடைமேல் பாரம் குலைத்தெங்கு நாணும்
நடமயிலாள் மண்ணில் மதி.

                               புறம்
அன்னத்தின் மாண்பை அறிவாய்நீ ஏருடன்
முன்னம்தாம் சென்றே முனைபவர் - செந்நெல்
பெருவிளைச்சல் கண்டு பெருவானைப் போற்றும்
எருதுழவர் தம்மை மதி.

(10-3-2014 காலை 9.25 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" ஏப்ரல் 2014 பக்கம்15)

"நம் உரத்த்சிந்தனை" 30-ஆம் ஆண்டுவிழா

ஆண்டுவிழா முப்பதில் ஆனந்தக் கொண்டாட்டம்
ஈண்டிதுபோல் செய்ய எவர்க்கியலும் - தோண்டுநீர்
ஊற்றனைய நம் உரத்த சிந்தனை ஏடுவர
லாற்றில் நெடிதுயரும் தேர்.

(விழா 9-3-2014 மாலை.மேற்குமாம்பலம் சந்திரசேகரன் திருமண மண்டபம்)
(எழுதியது 11-3-2014 காலை 9.55 மணி. வீடு)

கற்பகவல்லியே காப்பாற்று

பால கிருஷ்ணனை பங்கயக் கண்ணனை
சீலநர சிம்மனை சீர்மயிலை - கோலவிழி
சொற்சுவை முத்துராம மூர்த்தியை மற்றோரைக்
கற்பக வல்லிநீ கா!

(2-3-2014 மாலை 6 மணி-மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சுரர் திருக்கோயில்-நான்,வானொலி கமலக்கண்ணன்,சரித்திர நாவலாசிரியர் உதயணன்(நரசிம்மன்), காஞ்சிபுரம் கவிஞர் முத்து.ராமமூர்த்தி)

ஆணுக்குப் பெண் நிகர்

வயலில் மருத்துவத்தில் வான்படையில் வீட்டுச்
செயலில்நற் கல்வி சிறந்தார் - மயிலனையார்
காணுகின்ற தோற்றம் கணித்திடற் காகாதே
ஆணுக்குப் பெண்நிகரே ஆம்.

(22-2-2014 வீடு)
(வெளியானது 'மீண்டும் கவிக்கொண்டல்" மார்ச்சு 2014 பக்கம் 33. வரிசை.72)

வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

பிள்ளைத் தமிழில் பெரும்புலவர் ஞானத்தில்
எள்மூக் களவு மெனக்கில்லை - தெள்ளிய
என்னுரை நன்கமைய ஏத்துவன் பொன்விரிஞ்சை
யின்முருகன் பூந்தா ளிணை.

( உரையின் முன்னுரையில்- 21-2-2014 வீடு)

திரு.இல.கணேசன் 69 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

எமதினிய நற்பேறி தெவர்க்கிவண் வாய்க்குமென
               எல்லோரும் மகிழுகின்றோம்
       எங்களன் புத்தலைவ ராகவே விளங்கிடும்
                இலகணேச னார்பிறந்தநாள்

தமதுநலன் எதனையுங் கருதாம லினியபொற்
                 றாமரையை வழிநடத்தியே
       தன்னுடன் பிறப்பாக எம்மையும் மதித்திடும்
                தங்கமனத் தார்வாழ்கவே

இமயமுதல் குமரிவரை ஒரேநா டெனமுழங்கி
             ஏற்றவொரு கொள்கைதனில்
      இம்மியள வும்பிசகி டாதயிக் கர்மயோகி
             எண்ணியவா றினிதுவாழ்க

கமலா லயந்தன்னி லெழுந்தருளு மீசனார்
             கருணாம்பி கையுமையுடன்
      கணபதியும் வேலவனு மெங்களில கணேசனார்க்
             கருள்புரிய வாழ்க வாழ்க!

(16-2-2014 அன்று 69-ஆவது பிறந்தநாள்-நேரில் வாசித்துக் கொடுத்தது)

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

திரு.இல.கணேசன் -69

அறுபதோ டொன்ப தகவையா இல்லை
இருபதோ டொன்ப திவர்க்காம் - திருவார்
இலகணெச னாரிளமை யாய்விளங்கற் குண்டாம்
வலம்புரிப் பிள்ளையார் வாழ்த்து.

(16-2-2014 இல.கணேசன் பிறந்த நாள்)

இரட்டை வெண்பா (குறள். அதிகாரம் 111)

(திருக்குறள் அதிகாரம் 111-ல் (புணர்ச்சி மகிழ்தல்) உள்ள குறட்பாக்களில் உள்ள ஒரு சீரை முதற் சீராகக் கொண்டு அகமும், கொடையும் மறமும் கூறும் புறமும் வேண்பாவில் பாடவேண்டும்)

                                  அகம்

உலகு வியந்திடும் ஒப்பிலாத் தோற்றம்
குலவும் சிறுகிளிக் கொஞ்சல் - நிலவும்
பொறையினாள் மென்தோள் புணர்ச்சி மகிழ்தல்
இறையுல குக்கே இணை.

                                   புறம்

உலகு புரந்திடும் உத்தமன் வீரம்
இலகு பெரும்படை ஏந்தல் - நிலவின்
குளிர்ச்சியாய் ஆளும் கொடையிற் சிறந்தோன்
உளத்தினில் மக்கட் கிறை

(14-2-2014 னண்பகல் 12.30 மணி)
(வெளியானது "பன்மலர்" மார்ச்சு 2014)

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

விநாயகர்

நாகுபதி யின்துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாம லோடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.

(21-1-2014 இரவு 8.45 மணி)

சிவன் - விநாயகர்

வேகபுரம் தான்சிரித்து விண்ணோர் மகிழ்வடைய
நாகுபதி யாய்நின்ற நாயகமே - ஆகுபதி
உன்மூத்த் பிள்ளையான் உற்றிடும் துன்பங்கள்
ஒன்றுமிலா தாக்கிடச் சொல்.

வேகபுரம் =திரிபுரம் எரிந்து வேக; நாகுபதி-பசுபதி; சிவன்; ஆகுபதி=பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட பிள்ளையார்

(21-1-2014 இரவு 7.40 மணி)

சூடு சொரணையுண்டோ சொல்

தாய்தார மானத்தத் தந்தேச மண்பதனைப்
பேயெனவே காசுவிலை பேசுபவன் - வாயெல்லாம்
கேடுரைப்போன் பெண்பித்தன்  கீழ்க்குணத்தோன் என்றிவர்க்குச்
சூடு சொரணையுண்டோ சொல்!

(17-1-2014 மாலை 6.55 மணி)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" வெண்பா விருந்து - 5)

ஒளிப்படக் கவிதை - பேருந்து

மஞ்சு விரட்டெனவே மாநகரப் பேருந்தை
அஞ்சாமல் ஓடி அதில்தொங்கி - நெஞ்சுயர்த்தி
மேலேறி ஆடுவதோ மேதகு மாணவர்கள்
கல்லூரி சென்றிடுங் கால்!

(16-1-2014 காலை 11.45 மணி)

மகன்

அன்னையின் சொல்லை அனுசரித்தே பட்டறிவால்
தன்தந்தை காட்டும் வழிநடந்து - மின்னிடையார்
பொன்வலையில் வீழாது புத்தகங்கள் கற்றே
இன்முகமாய் நிற்போன் மகன்.

("மீண்டும் கவிக்கொண்டல்" திசம்பர் 2012. பக்கம் 30.வரிசை 61)

உழைப்பாளர்

பொல்லா வயிறு புசித்துப் பசியடங்க
எல்லாக் கடும்பணியும் ஏற்றிடுவார் - நல்லோர்
பிழைப்பைக் கெடுக்காமல் பேருதவி செய்தே
உழைப்பாளர் வாழ்வை உயர்த்து.

("மீண்டும் கவிக்கொண்டல்" மே 2013 பக்கம் 30.வரிசை எண்.61)

அண்ணா

எத்தலைப்பைத் தந்தாலும் இன்றமிழில் ஆங்கிலத்தில்
முத்தனைய சொற்பொழிவை முன்வைப்பார் - நித்தம்
கவலைபல வந்தும் கருத்தழியா நெஞ்சர்
அவரேதாம் அண்ணா அறி.

("மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2014. பக்கம் 31. வரிசை எண்.49)

பொங்கல்

நெல்மணிகள் வீடுயர நேரிழையார் பொங்கலிட
நல்லுழவர் காளைக்கு நன்றிசொல்வர் - வெல்லுபுகழ்
செங்கதிரோன் புன்னகைக்கச் சித்திரமாய் மாக்கோலம்
பொங்கல் வருகின்ற போது.

(வெளியானது 'மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல்மலர்-சனவரி 2014 பக்கம் 62.வரிசை எண்.71. மலர் 22, இதழ் 8)

முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்

அளப்பரிய கல்வியார் ஆழ்வார்கள் பாட்டில்
உளமகிழ்ந்து செய்தார் உரைநூல் - விளக்கி
அருந்தத் துவத்திலும் ஆழ்பொருள் சொல்வார்
இராவ கமலக்கண் ணன்.

(15-10-2013 இரவு 9 மணி-காஞ்சிபுரம் டாக்டர் ஆர்.வி.கமலக்கண்ணன்,எம்.ஏ., பி.எட்.,பிஎச்.டி அவர்களைப் பற்றி)

பார்த்தசாரதி கோயில் - திருவல்லிக்கேணி

பார்த்தனுக்குச் சாரதியை பக்தர்கட் கெம்பிரானை
ஆர்த்திடும் சங்கம்நல் ஆழியானை - கூர்த்தமதி
தந்தருள் வானைத் திருவல்லிக் கேணியில்
வந்தனை செய்தேன் உவந்து.

(19-9-2013  வியாழன்  நண்பகல் 12.10 மணி. முழுமதி. பார்த்தசாரதி கோயில்)

யாவர்க்கும் பொங்கல் இனிது

செங்கதிரோன் புன்னகைக்க செங்கரும்பு மஞ்சளிஞ்சி
எங்குலப் பெண்டிர்தைப் பொங்கலிட - பொங்கிவரும்
காவிரியில் வெள்ளம் கரைபுரண் டோடினால்
யாவர்க்கும் பொங்கல் இனிது.

(27-12-2012 காலை 10.10 மணி)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல் மலர்-2013)

பாரதியார்

பாரதத்தைப் பாப்பாவைப் பாஞ்சாலி யைத்தமிழை
வீரமிகு சொற்களிலே பாடியவன் - ஈரமுடன்
எல்லா உயிர்களையும் இன்பமுற நேசித்த
வல்லான்நம் பாரதியை வாழ்த்து.

(எழுதியது 1-8-2014 இரவு 11.30 மணி, லாஸ் ஏஞ்சல்ஸ்)

சுதந்திரமே வாழ்வில் சுகம்

கூண்டுக் கிளியான கோடீஸ் வரனினும்
ஆண்டியாய் ஊர்சுற்றல் ஆனந்தம் - யாண்டும்
இதந்தரும் ஆன்மாநல் இன்புறும் என்றும்
சுதந்திரமே வாழ்வில் சுகம்.

(எழுதியது 9-7-2014 காலை 10.58 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2014 பக்கம் 54)

ஈற்றடி தானே இனிப்பு (2-ஆம் பரிசு)

ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில்
யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு
மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும்
ஈற்றடி தானே இனிப்பு!

(எழுதியது 31-5-2014 பிற்பகல் 2.35 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2014.  பக்கம்.56-இரண்டாம் பரிசு பெற்றது)

வாக்களிப்போம்

அயர்விலாச் சேவையால் அல்லலுறு மக்கள்
துயர்துடைப் போனேநற் தொண்டன் - உயர்வான
நோக்கத்தில் பாடுபடும் நல்லவர்க்கு நாமெல்லாம்
வாக்களிப்போம் சாவடிக்கு வா.

(எழுதியது 2-4-2014 மாலை 5.25 மணி)

வேறெங்கும் உண்டோ

மேன்மைதிகழ் ஆசான்கள் மெச்சுபுகழ் சீடர்கள்
கோனுயர நல்லறம் கூறமைச்சர் - ஆன்மிகச்
சாறளிக்கும் தத்துவச்சான் றோரத் தமிழகம்போல்
வேறெங்கும் உண்டோ விளம்பு.

(எழுதியது 3-3-2014. மாலை 5.15 மணி)
( வெளியானது "அமுதசுரபி" ஏப்ரல் 2014 பக்கம் 69)

காரம் இனித்திடும்

பணியாரம் கேசரி பால்கோவா லட்டு
துணையாய் அதிரசம் பொங்கல் - மணமுடன்நா
நீரூறும் ஜாங்கிரி  நெய்யல்வா இப்பல
காரம் இனித்துடும் காண்.

(எழுதியது 3-2-2014)

புத்தகமே சொத்து

செல்வமிகச் சேர்க்கும் சிறந்தநற் கல்வியதைப்
பல்வகையாம் நூல்கள் பரிந்தளிக்கும் - நல்லுலகில்
எத்திசையும் வெல்லுபுகழ் ஏற்றமது தந்திடும்
புத்தகமே சொத்தாம் புகல்.

(வெளியானது "அமுதசுரபி" ஜனவரி 2014 பக்கம் 65)

ஆண்டாள் - அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம்

அரங்கனே பின்னாளில் ஆள்வானென் றன்றே
கரங்களில் சக்கரமும் சங்கும் - விரந்தருள
பாத மணிஇசைக்கப் பொன்னூஞ்சல் ஆடிடும்
கோதைக்குக் கோது கலம்!

(நவம்பர் 2013 அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம் ஓவியர் கோபுலு வரைந்தது)

தீபாவளி மலர் - அமுதசுரபி

தீபா வளிமலரில் தித்திக்கும் பாவகைகள்
வாபா ரெனும்வண்ண ஓவியங்கள் - பாபச்
சுமைதீர்க்கும் ஆன்மிகச்  சொல்வளங்கள் மின்னும்
அமுத சுரபியில் உண்டு.

(அமுத சுரபியிவ் வாண்டு) (வெளியானது "அமுதசுரபி" டிசம்பர் 2013.பக்கம்.74)

பேரின்பச் சொற்கடல் பாரதி

கண்ணனை சக்தியைக் கர்த்தரை அல்லாவை
வண்ணமுடன் பாடும் வரகவி - எண்ணமெலாம்
நாட்டு விடுதலையே! நம்பெண்டிர் கல்வியிலும்
நாட்டமுறச் செய்தார் நன்று.

(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2013 பக்கம் 47)

வ.வு.சி.

வக்கீல்தாம் கப்பலை வாங்கினார் வெள்ளையரால்
செக்கிழுத்தார் நொந்தார் சிறைதனில் - தக்கபல
நூல்களைச் செய்தார்தம் நுண்ணறிவால் வ.வு.சி.
போலொருவர் உண்டோ புகல்.

(வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2013 பக்கம் 19)

விவேகானந்தர் ( 3-ஆம் நிலை)

குமரி முனயில் கொளுந்துவிடும் ஞானம்
நமக்கு வழிகாட்டும் நாளும் - அமெரிக்கர்
விந்தைத் துறவியெனும் நம்விவே கானந்தர்
சிந்தனையை நீசிரமேற் கொள்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2013. மூன்றாம் நிலையில் தேர்வு.2)

'அன்பு' எனத் தொடங்கி 'அறம்' என முடியும் வெண்பா(3-ஆம் நிலை)

அன்பாய் நடத்தல்நல் லாதரவாய்ப் பேசிடுதல்
துன்பம் வருங்கால் துயர்துடைத்தல் - மண்ணுலகில்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணிடுதல் மூத்தோரை
செவ்வையாய்க் காத்தல் அறம்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2013 பக்கம் 53. மூன்றாம் நிலையில் தேர்வு-1)

மனிதனாய் மாறு

அன்னையைத் தந்தையை ஆசானை நண்பனை
என்றுமே போற்றூம் இயல்புகொள் - பொன்போல்
கனிகாய் மலர்தரும் காடுகள் காப்பாய்
மனிதனாய் நீமீண்டும் மாறு.

(வெளியானது "அமுதசுரபி" மே 2013 பக்கம் 67)

வன்முறையைத் தீர்க்கலாம் வா

சாதிமத பேதங்கள் சண்டைகள் சச்சரவு
வேதனைதான் ஏதும் விதியாமோ - தீதிலா
இன்சொல் விவேகானந் தர்வழியைப் பின்பற்றி
வன்முறையைத் தீர்க்கலாம் வா!

(வெளியானது "அமுதசுரபி" மார்ச் 2013 பக்கம் 64)

இம்மாதம் நாள் குறைதல் ஏன்?

மாதத்தில் முப்பதுநாள் மாடாய் உழைத்தால்தான்
தேதியில் சம்பளம் தந்திடுவார் - சோதனையாம்
சும்மா கொடுத்ததாய்ச் சொல்லிப் புலம்புகிறார்
இம்மாதம் நாள் குறைதல் ஏன்?

(வெளியானது "அமுதசுரபி" பிப்ரவரி 2013 பக்கம் 55)

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

உயிரின் விலை இதுதானா?

பானை உடைஞ்சிருச்சு பாலெல்லாம் கொட்டிருச்சு
தீநாக்கு வந்தல்லோ தெய்வத்தைத் தீண்டிருச்சு
தோணியிலே போனமச்சான் துள்ளி வருவார்னு
ஆனமட்டும் காத்திருந்தேன் அய்யோன்னு போனாரே!

மத்திமீன் வலைவீசி மலையளவு கிடைக்கு மின்னார்
மத்தியிலே சுட்டுப்புட்டான் மனம்ஒடைஞ்சு போனதையா
காக்காமீன் கெளுத்திமீன் கடலெல்லாம் கெடைக்கு மின்னார்
சாக்காடு வந்ததையா சரமாரி குண்டுகளா1

கெண்டைமீன் போல கிளியேஉன் கண்ணுன்னு
மண்டபத்துத் தொறப்பக்கம் மனசாரச் சொன்னவனே
கண்டாங்கிச் சீலையிலே கருப்பாயி ஒம்போல
உண்டாடி பொண்ணுகன்னு ஊரறியச் சொன்னவனே!

பிச்சிப்பூ வாங்கிவந்து பிரியமுடன் சூட்டிவைப்பே
கச்சத்தீ வடுத்த கடும்பாவி சுட்டுப்புட்டான்
சின்னஞ் சிறுகளை சீரழிய விட்டுப்புட்டு
சிலோன்காரன் உன் ஒடம்பை சல்லடையாய் துளைச்சுட்டான்!

சண்டைக்கு நான்போறேன் சட்டுன்னு வெட்டிடுவேன்
தொண்டைச் சங்கறுத்துத் தொடைரெண்டை ஒடைச்சிடுவேன்
கக்கத்தில்  அரிவாளைக் கணக்காநான் எடுத்துவச்சேன்
சர்க்காரு விசயமுன்னு சாதிசனம் தடுக்குதையா!

மீன்பிடிக்கப் போறவுக மீனோட திரும்பட்டும்
மின்னட்டாம் பூச்சிகளா பிள்ளைகுட்டி காத்திருக்க
நான்பட்ட கஷ்டமெல்லாம் நாளக்கிப் படவேண்டாம்
நாட்டாரே ஏழைக்கு நல்லவழி சொல்லுமையா!

கடல்மேல் பிறந்து கண்ணீரில் மிதக்கும் மீனவர், சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை எண்ணி வேதனையோடு புலம்பித் தவிக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வீரியக் கவிதை......

என்று பாராட்டிக் கட்டம் கட்டி வெளியிட்டது "மாலை முரசு" நாளிதழ்.         தேதி  9-12-2000)

சனி, 2 ஆகஸ்ட், 2014

இளந்தேவன் தலைமை-வானொலி

சென்னை நிலையத்தின் சீர்மிகு வானொலி
பொன்போல் சுதந்திரத்தைப் போற்றிடும் - நன்னாள்
உளமாரப் பாவரங்கை ஓங்கி அமைத்தார்
இளந்தேவன் பாத்தலைமை ஏற்று.

(15-8-2011 இராணி மேரிக் கல்லூரி-வானொலி சுதந்திர தினச் சிறப்புக் கவியரங்கில் நான்)

காந்தியடிகள் வழியில் நடப்போம்

சத்தியமே வெல்லுமென்றும் சான்றோர் அறவழியில்
இத்தரையில் எல்லாம் இயலுமென்றார் - புத்துலகில்
சாந்தமுடன் எந்நாளும் சச்சரவொன் றில்லாது
காந்திவழி நாம்நடப்போம் வா.

(5-9-2012 காலை 9.45 மணி 407 லா சே)
(வெளியானது "அமுதசுரபி" அக்டோபர் 2012)


கலைமாமணி வாசவன் அவர்களுக்கு

பால கிருஷ் ணன்பா பரிசுக் குரியதென
ஞால முணர்ந்தநம் வாசவனார் - சீலமுடன்
தேர்ந்தெடுத்தார் அன்னார் சிறப்புறு கைகளோ
ஓர்ந்தே எழுதும்நல் ஊற்று.

(7-9-2012 மாலை 6.15 வீடு)
(உலகத்தமிழ் எழுத்தளர் சங்கம் இலக்கியப் போட்டியில் கவிதைக்கு 2-ஆம் பரிசு பெற்றேன்)

வெண்பா - மலரின் பெயரால் தொடங்கல்(-2-ஆம் பரிசு)

மல்லிகை முல்லை மருக்கொழுந் தேயெனச்
சொல்லியே விற்கும் சிறுமிதான் - ஒல்லையில்
வீடு திரும்பித்தன் பாடம் படித்திட
நாடும் அவளுளம் நன்கு!

("அமுதசுரபி" ஆகஸ்ட் 2012-  2ஆம் பரிசு பெற்றது.)

வெண்பா - கனியின் பெயரால் தொடங்கல்

நாவல் பழத்தை நறுநெல்லி நற்கனியை
ஆவலுடன் உண்டநம் ஒளவையார் - மேவுதமிழ்
சேயோனோர் மாங்கனிக்காய் சென்றுமலை நின்றவுடன்
வாயினிக்கப் பாடியழைத் தார்.

(9-8-2012 இரவு 10.20 & 10.8.2012 காலை 9.25)
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2012)

காளிகாம்பாள்

வீட்டினில் சோறிட மறுத்தாள் மகனோ
நீட்டிய கைகளில் பணந்தர மறுத்தான்
ஈட்டிய பொருளெனக் கிலையே காளியுன்
வீட்டினில் மதியம் உணவிடு தாயே.

(31-8-2012 காலை 11.5காளிகாம்பாள் கோயில்)

கையிலே காசில்லாக் கால்

சொந்தமும் பந்தமும் சுற்றமும் நட்புமே
வந்துனைச் சூழும் வசதியெனில் - நொந்தழநீ
பையவே சென்றிடுவர் பாரா முகமாயுன்
கையிலே காசில்லாக் கால்.

(29-8-2012  பிற்பகல் 3.50 407 லா சே)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" செப்டம்பர் 2012)

புரந்தர தாசர்

கணிகை புரந்தரியின் கானமஷி வீணை
மணியொலிக்கக் கண்ணனின் ஆட்டம் - கணப்பொழுதில்
நேசமிகு வேங்கடனைக் கண்ட ரகுநாதர்
தாசன் புரந்தரி யானார்.

(25-8-2012 மாலை 3.45 சனி. வீடு)
(இன்று சனிக்கிழமை திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கண்ணனின் கதைகள். ஆன்மிக மலர்.தினமலர்)

நீதி தவறாமல் நில்

பொய்ச்சாட்சி சொல்லல் புறந்தள்ளல் வேண்டாரை
'பை'நிறைந்த பின்னரே தீர்ப்புறைத்தல் - அய்யகோ
போதனைகள் செய்யாது பொற்கைத்தென் பாண்டியன்போல்
நீதி தவறாமல் நில்.

(26-7-2012 வியாழன். இரவு 9.50 வீடு.-புத்தரைபோல் என்றுமே எனவும் எழுதலாம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2012)

உயிர்ப்பலி வேண்டாம்

அன்பே வடிவான ஆண்டவன் எவ்வுயிரும்
கொன்று படைக்க விரும்பிடான் - என்றும்
கடவுள் பெயர்சொல்லிக் காவு கொடுப்போர்
அடம்பிடிக் காமை அறம்.

(26-7-2012 நண்பகல் 12.50 மணி 407 லா சே)
(வெளியானது 'முல்லைசரம்")

கன்னியாகுமரி பகவதி அம்மன்

குமரி முனையில் குளிர்ச்சியாய் நின்றே
நமது குறைகளைத் தீர்ப்பாள் - அமுதாய்
அகவை முதிர்ந்தோர்க்கும் ஆறுதல் நல்கும்
பகவதி அம்மனைப் பாடு.

(18-7-2010 மாலை 6.40 கன்னியாகுமரி-கோயில்)

செல்வர் அமைதியுறார்

அன்றாடம் காய்ச்சிகள் அல்லலின்றித் தூங்கிடுவார்
என்றும் உழைத்துண்பர் ஏற்றமுடன் - குன்றனைய
செல்வம் படைத்தோர் சிறிதும் அமைதியுறார்
பல்வகையில் தொல்லை அவர்க்கு.

(28-6-2012 காலை 10.30 மணி 407 லா சே)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" சூலை 2012)

பாவலர் புரட்சிதாசன்

இயலிசை கூத்து திரைக்கா வியத்தில்
உயர்தனிப் பேற்றை உடையார் - அயர்ந்தெங்கும்
புண்படப் பேசாப் புரட்சிதா சன்போன்று
பண்பாட்டைக் காக்கப் பழகு.

(28-4-2012 407 லாசே. புரட்சிதாசன் மறைவு-27-4-2012)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஜூன் 2012 பக்கம் 30)

திருக்குறள் தேசியநூல்

எல்லாப் பொளும் இதனுள் அடக்கம்
சொல்லாச் செய்தி ஏதும் இல்லை
திருக்குறள் நமது தேசிய நூலெனும்
கருத்தை மறுப்பார் எவரும் இலரே.

(26-6-2012 காலை 1.30 மணி 407 லா சே)
(வெளியானது "கண்ணியம்" ஆசிரியப்பாப் போட்டி. ஆகஸ்ட் 2012)

உரலும் குரலும்

உரலில் பிணைத்தாள் ஒருதாய் இனிய
குரலால் பிணைத்தாள் ராதை - இருவர்க்கும்
கட்டுப்பட் டுக்கிடந்த கண்ணன் கதைகளை
இட்டமுடன் கேட்போம் இனிது.

(23-6-2012 சனிக்கிழமை மாலை 4.25 மணி. 407 லா சே. lawn bench)
(குறிப்பு:  இன்று தினமலர் ஆன்மீக மலரில்"கண்ணன் கதைகள்" என்னும் தொடரில் அக்கரையில் ஒரு முனிவர் என்ற தலைப்பில் அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியதன் தாக்கம்)

மூப்புநோய்

எண்ணம் தடுமாறும் இல்லாத் துயர்வரும்
உண்ணப் பிடிக்கா துறங்கவும் - எண்ணிலாச்
சொத்தும் பிறர்க்கேகும் சோர்வே உடன்சூழும்
இத்தரையில் மூப்புநோ யால்.

(21-6-2012 வியாழன். காலை 10.40 மணி. 407 லா சே)
(வெளியானது "முல்லைச்சரம்" ஜூலை 2012)

வெண்பா "அ" வில் தொடங்கி "ன்" இல் முடிதல் -3 ஆம் நிலையில் தேர்வு

அமுத சுரபி கலைமகள் தேவி
குமுதம் இலக்கியப் பீடம் - எமதிதழ்கள்
கண்ணியம் குங்குமம் கல்கி கவிக்கொண்டல்
எண்ணி லடங்கிடாத் தேன்.

(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2012.  3-ஆம் நிலை)

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அன்பே அமுது

செல்வமும் கல்வியும் சீர்மிகு வேலையும்
எல்லா நலன்களும் ஏற்றிருதும் - மெல்லியலாய்
பொன் தந்தும் கிட்டாது பூமியினில் நல்லவர்கள்
அன்பொன்றே நெஞ்சின் அமுது.

(10-10-2006 பிற்பகல் 12.05 மணி. அலுவலகம்)

சீர் தூக்கிச் செய்க சிறப்பு

பிறப்பினை செல்வத்தைப் பெற்றநல் வாழ்வைக்
கருத்தினில் கொண்டிட வேண்டா - வருத்தமாய்
யார்வரினும் இன்னல் இனிது களைவோர்தம்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு.

(5-6-2006 காலை 4.55 மணி. வீடு)

நல்லி குப்புசமிச் செட்டி

பட்டைப் புகழவா பாத்திரத்தை நோக்கிநல்
துட்டைக் கொடுக்குங்கை போற்றவா -மட்டிலாக்
கல்வி இலக்கியங்கள் கண்போல் காத்திடும்
நல்லியின் தொண்டென்றும் நன்று.

(11-11-2011 மாலை 3.15 மணி)

மூத்தோர் சொல் கேள்

அறிவினால் பெற்ற அனுபவத்தால் பண்புச்
செறிவினால் மூத்தோர் சிறந்தார் - பொறுமையாய்
அன்னார் அறிவுரையை அப்படியே ஏற்றிடில்
எந்ந்நாளும் இன்பம் இனிது.

(19-4-2012 வியாழன் .பகல் 11.59 மணி.லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" மே 2012)

மதுவிலக்கு

கூலி முழுதும் குடித்தே கரைத்திடுவார்
பாலின்றிப் பிள்ளை பசிநோகும் - சோலைப்
புதுமலராய் மாறிடப் புத்திமதி சொல்வீர்
மதுவிலக்கே மானிடரின் மாண்பு.

(9-4-2012 திங்கள் காலை 11 மணி. 407 லா.சே)
(வெளியானது "அமுதசுரபி" மே 2012)

மூப்பில் எச்சரிக்கை

பாடுபட்டுச் சேர்த்த சொத்தைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
நாடிவரும் சொந்தங்கள் நம்பாதே - கேடுகெட்ட
மக்களுனைத் தள்ளிடுவார் மண்ணுக்குள் மூப்பினிலே
எக்கணமும் எச்சரிக்கை கொள்.

(16-3-2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" ஏப்ரல் 2012)

அறநெறி வழுவாதே

உண்மை உழைப்புநல் ஊதியம் தந்திடும்
கண்ணெனப் போற்று கடமையை -திண்ணமாய்
என்றும் அறநெறி யில்வழு வாதுநீ
குன்றாச் சிறப்போடு வாழ்.

(16-3-2012 காலை 4.30 அம்ணி. வீடு)
(வெளியனது "நம் உரத்தசிந்தனை")

ஆனந்தத் தாண்டவம்

திரைகடல் வழங்கிடும் சங்கொலி முழங்கிட
              தேவர்கள் இசைபாட
   தித்தித் தோம்தம் தம்தம் எனமத்
               தள இசை நந்திதர

தரையினில் அடிபர வாதது போல்மணிச்
               சதங்கைகள் துதிபாடத்
     தகதக வெனுமொளி விரிசடை பரப்பிடத்
               தாவிக் குதித்தாடி

இருகரம் இணைந்துபி ரிந்துவி ரல்களில்
            எழும்பிடும் முத்திரைகள்
     இப்புவிபேசிடும் அத்துணை மொழிகளும்
              இயம்பிடும் மலர்விழிகள்

அரனுடன் உமையவள் அபிநய சுந்தரி
             ஆடிடும் எழிற்கோலம்
      அடியவர் மனந்தனை ஆனந்த வாரியில்
              ஆழ்த்திடும் தாண்டவமே!
                                                                         - அரிமா இளங்கண்ணன்

(14-3-2012 காலை 4.40 வீடு. நிறைவு மாலை 5.47.LC 407)

மனம் தளராதே

மதயானை போன்றதொரு வேகத்தி லிரவுபகல்
             மாடாக உழைத்திட்டனை
    மக்களும் அன்பொழுகும் மனைவியும் பக்கத்தில்
             மெச்சவாழ்ந் திடஎண்ணினாய்

விதியதோ வலியதுன் குடும்பத்தி லுள்ளவருன்
           உழைப்பினை உறிஞ்சிட்டனர்
    உனக்கென்றே எதனையும் சேமித்தி டாமலே
           வீடுவீ  டென்றலைந்தாய்

புதுவாழ்வு மாடிமனை பெண்டாட்டி பிள்ளைகள்
           போம்வழியில் காணவில்லை
     பொய்யான உலகத்தை மெய்யாக நம்பியே
            பொருளெலாம் இழந்திட்டனை

இதுதான் உலகமென் றறிந்துகொள் நண்பனே
             ஏன்கவலை கொள்கின்றனை
      இருப்பதைக் கொண்டுமன வலிமையுடன் நன்றாக
             ஏற்றமுடன் வாழ்ந்திடுகநீ!

(27-2-2012 மாலை 6.50 மணி. அலுவலகம்)


    

வியாழன், 31 ஜூலை, 2014

அணிதிகழும் வடிவுடை அம்மன்

அசைகின்ற தண்டையும் அஞ்செஞ் சிலம்புகள்
       ஆர்ப்பரித் திடுவோசையும்
    ஆணிப்பொன் நவமணிகள் அழகொளிர மெல்லிடையில்
        அணிதிகழும் ஒட்டியாணம்

ஒசிந்தவா ரிருகைகள் உயர்த்திடும் போதிலே
      ஒலிபெருகு வளைகளாட்டம்
  ஒளிவிடும் நவரத்ன மோதிரங் கள்விரலில்
       உறவாடும் அரவமாமே

இசையோடு நர்த்தனம் செய்கின்ற ஈசனுக்
        கேற்றதோள் அணிகலன்கள்
   இலங்கு கழுத்தினில் தரளவடம் செவிக்கணிகள்
          ஏற்றமணி மகுடத்துடன்

நிசியிலும் ஒளிவெள்ள மாணிக்க மூக்குத்தி
         நினதுபல அணிகளன்றோ
   நின்நினைவில் என்கனவில் வந்துநகை புரிகின்ற
         வடிவுடை அம்மையருள்வாய்!

(15-2-2012 மாலை 5.45 மணி. அலுவலகம்)

கருணையின் வடிவம் காளிகாம்பாள்

ஓய்ந்திருக்க நேரமிலை உனதுமுகம் எனதுயிரில்
              ஓயாது நிழலாடிடும்
     உயரிமயம் சென்னையினுள் வந்ததெனக் கமடேசர்
              உடனுறையும் தேவிநீயே

வாஞ்சையுடன் பெண்மணிகள் வாழ்வுமங் கலமாக்கி
            வரமருளும் செந்தூரமே
     வளையொலிக்கச் சேய்களுடன் அவராடும் போதினில்
            வாய்விட்டுச் சிரிக்கின்றவள்

காய்ந்துசரு காகியுடல் உதிர்கின்ற வேளையிலும்
           கறந்தபால் ஒத்தகருணை
    கடாட்சத்தி னாலுயிரை மீட்டுக் கொடுத்திடும்
           கனிவுடை அன்னைநீயே

ஊஞ்சலிலே ஆடியிவண் ஒய்யார மாய்மிளிரும்
          ஒப்பற்ற காளிகாம்பாள்
    உனதடியில் அனுதினமும் பணிபுரிந்தே எனதுயிரும்
          உய்யும்நாள் எந்தநாளோ!

(10-2-2012 வெள்ளிக் கிழமை கோயிலில் அம்மன் ஊஞ்சல் சேவை. எழுதியது மாலை 5.10 மணி. அலுவலகம்)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" 28-ஆம் ஆண்டுவிழா மலர். 25.3.2012)

வேண்டாச் செயல்கள் விலக்கு

மாற்றாரே யானாலும் மன்னுபுகழ் நற்செயலைத்
தூற்றாது போற்றல் உயர்வாகும் - ஏற்றமுடன்
தீண்டாமை சூது திருடாமை கொல்லாமை
வேண்டாச் செயல்கள் விலக்கு.

(27-2-2012 மாலை 5.45மணி.அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்")

தைப்பூசம்-கந்தகோட்டம்

துய்ப்பதற் கொன்றில்லை இவ்வரிய பூமியில்
           தூயநல் எண்ணமின்றி
    தொடர்ந்திடும் வெவ்வினைகள்  மிரட்டி அதட்டிடும்
           தொந்தரவு பலசெய்திடும்

கைப்பொருள் இன்றியே கடைத்தெரு வில்சென்றால்
         கைகொட்டி நகைத்திடாரோ
    கட்டிய மனைவியும் பிள்ளையும் காசினைப்
         பெரிதெனக் கருதுமுலகம்

மெய்ப்பதம் காணவே மீண்டும் மீண்டுமென்
          முருகனே எனச்சொல்கிறேன்
   மேன்மையாய் அருணகிரி பட்டினத் தாரையும்
          ஆட்கொண்ட தெய்வம்நீயே

தைப்பூச நன்னாளில் கந்த கோட்டத்துள்
        தலைவநினைக் கண்டுகொண்டேன்
   தளர்ந்துடலும் வீழுமுன் தாங்கிப் பிடித்திடுக
        தருமமிகு கந்தவேளே!

(7-2-2012 காலை 8.35 மணி.கந்தகோட்டம், சென்னை)
          

அன்பே வெல்லும்

பாடுபட்டுச் செல்வத்தைப் பக்குவமாய்ச் சேர்த்தாலும்
வீடு நிறைந்திட வேண்டுமென்பார் - தேடிய
செல்வம் பெரிதல்ல சிந்தையினில் அன்பொன்றே
வெல்லுமென் றாருரைப் பார்?

29-1-2012 ஞாயிறு இரவு 9.42 மணி. வீடு)
(வெளியானது; "மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2012. பக்கம் 28)

அன்பே செல்வம் (அறுசீர் ஆசிரிய மண்டிலம்)

அல்லும் பகலும் உழைத்துச் செல்வம்
      அகத்தில் நிரம்பிடினும்
எல்லை இல்லா ஆசைகொண்டோர்
       எதையும் பொருட்படுத்தார்
தொல்லை தந்தே மனைவி மக்கள்
       துரத்த முனைந்திடுவார்
வெல்லும் அன்பே நிலைத்த செல்வம்
      வேறெங் குணர்ந்திடுவார்?

(29-1-2012 இரவு 9.37 மணி. வீடு)
(வெளியானது; "நற்றமிழ்".)

கருணாம்பிகையே காப்பாய் (வடிவுடை அம்மன்)

தெருவிலே நின்றுதினம் பிச்சை எடுத்துண்ணும்
             திக்கற்றோர் மிகுந்துள்ளனர்
    தீராத பேராசை கொண்டோர் கடன்வாங்கித்
             திக்குமுக் காடுகின்றார்

திருவுடையோ னிடந்தனில் பெண்டாட்டி பிள்ளைகள்  
          தித்திப்பாய்ப்  பேசுகின்றார்
     தேதிஒன் றானதும் சம்பளப் பணம்தேடும்
         திரைநரை முதியோர்மனம்

பொருளிலார்க் கிவ்வுலக மில்லையென் றார்குறளில்
        புவியினிற் பொருந்துமென்றும்
  பொன்னும் மண்ணுமெந் நாளு மிலாதுவிலை
        விண்ணையே தொட்டதின்று

கருணாம்பி கையுந்தன் கண்ணசைவே  ஏழுலகும்
        காக்கின்ற சக்தியம்மா
      கவலைகள் வாராமல் என்னையும் காத்தருள்
          வடிவுடை அம்மைநீயே!

(பத்தி 3&4  19-1-2012  காலை 7.45 மணி.பத்தி1 &2 பிற்பகல் 12.15 அலுவலகம்)

(குறிப்பு: ஹலாய் மெமோன் திருமண மண்டபம்-மணமக்கள்;கருணாம்பிகை+செந்தில்நாதன்)
  
  

'வா' வென்றழைப்பாய் வடிவுடை அம்மனே

யாதும் சுவடுபடா திருந்தாலு முன்வினைகள்
           எகத்தாளம் செய்கின்றன
     எல்லோர்க்கும் நல்லவரா யிருப்பதிப் பூவுலகில்
            இயலாத காரியந்தான்

கோதையும் காரைக்கா லம்மையும் ஒளவையும்
          குணக்குன்றாய் உயர்ந்தமாதர்
   குன்றனைய நலந்தள்ளிக் கடுகளவு குறையினைக்
          கூறுவர் இன்றுபெண்டிர்

போதும் போதுமிப் புவியினிற் பொய்யர்கள்
         புரட்டர்கள் மிகுகின்றனர்
    புத்திரரும் பெண்டிரும் சத்துருவாய் வாழ்வினைப்
        போர்க்களம் செய்கின்றனர்

வாதும் சூதுமென வகையறியா திவ்வுலகில்
        வாழ்ந்துநான் என்செய்குவேன்
   "வா'வென் றழைத்துனது மலரடியி லேசேர்ப்பாய்
         வடிவுடை அம்மைநீயே!

(14-1-2012 மாலை 4.35 மணி. அலுவலகம்)
        

பொங்கல்

செங்கதிர் உறைந்திடும் முன்பனிக் காலம்
       சிந்திடும் வாசலில் பூக்களின் கோலம்
தங்கத் தாரகை தைமகள் பிறந்தாள்
       தரணியில் உழவர் பெருமையில் சிறந்தார்
பொங்கிடும் பொங்கல் இளஞ்சுடர்க் காலை
       புதுமைகள் நிறைந்திடும் வாழ்க்கைச் சோலை
எங்கும் மங்கலம் இனிதாய் நிறைகவே
       எங்கள் தமிழர் புவியினில் உயர்கவே!

(13-1-2012 அலுவலகம்)(வெளியானது "இலக்கியச்சோலை" மலர்)

புதன், 30 ஜூலை, 2014

வாழ்ந்து காட்டுவோம்

கொஞ்சமும் ஊழலின்றிக் கொல்லும் பகைவிலக்கிக்
கஞ்சிக் கழுவோ ரிலையென்று - நெஞ்சத்தின்
தாழ்வு நிலையகற்றித் தங்கநவ பாரதத்தில்
வாழ்ந்துநாம் காட்டுவோம் வா!

(6-1-2012 காலை 9.45 மணி. அலுவலகம். கரு:5-1-2012 மாலை)
(வெளியானது: "அமுதசுரபி" பிப்ரவரி 2012)

அறுசீர் ஆசிரிய மண்டிலம்-6

எட்டும் தூரம் வரையும்
   ஏகி நடக்க வேண்டும்
கொட்டும் மழையில் நன்றாய்க்
   குளித்துத் திளைக்க வேண்டும்
பட்டாம் பூச்சி போன்றே
   பறந்து திரிய வேண்டும்
கொட்டிக் கிடக்கும் இன்பம்
   கூடித் துய்க்க வேண்டும்.

(30-12-2011 மாலை 6.26 மணி. அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்" புதுச்சேரி. மாச்சீர் அமைந்தது)

வஞ்சிக்கும் காம மோகம் (வடபழநி முருகேச சதகம்)

சோம பானமது மிகவருந்தி சிரசேரிச்
           சொக்கவைத் திடுதலைப்போல்
    சுந்தரிகள் உடலழகில் மனமெலாம் வெறிகொண்டு
             சுற்றிடும் பித்தர்கூட்டம்

காமனது விளையாடல் எலைமீற சிவனுமே
           கண்சிவந் தெரித்திட்டனன்
    காகா சுரனுடைய காமக்கண் ஊனமுறக்
          காட்டினான் சீராமனும்

இராமனது மனைவியை மோகித்துச் சிறையெடுத்த
         இராவணன் புகழ்குன்றினான்
    இரக்கமி லாதுதொடை ஏறென்று திரெளபதியை
         இகழ்ந்தவன் என்னவானான்

வாமனா யுலகங்க ளளந்தவன் மருகனே
          வஞ்சிக்கும் காமமோகம்
    வடிவேலி னொளியாகத் தடியோடு புகழ்மேவு
           வடபழநி முருகேசனே.

(229-12-2011 காலை 5.30 மணி. வீடு)


பொங்கல்

எத்துணையோ பேருழைப்பில் ஏற்றமிகு நல்விளைச்சல்
புத்தரிசி வெல்லம் புதுப்பானை - தித்திக்கச்
செங்கரும்பு மஞ்சளிஞ்சி சீர்மிகவே மாக்கோலம்
பொங்கிடும்தைப் பொங்கல் பொலிந்து.

(28-12-2011 பிற்பகல் 1.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல் மலர்.சனவரி2012 .பக்கம்73)

கீரைகள் (வடபழநி முருகேச சதகம்)

நல்ல தூதுவளை காசநோய் நீக்கிடும்
         பிரண்டைக்குடல் புண்ணாற்றிடும்
   நஞ்சுக்கு மருந்தாகும் அகத்திக் கீரைநற்
         கொடிப்பசலை காமமூட்டும்

கொல்லும் இருமல்சளி புகைச்சலைப் போக்கிடும்
         குணமுள்ள முசுமுசுக்கை
   குறையாத மூலநோய் புண்களை ஆற்றிடும்
         கொத்தாகத் துத்திஇலைதான்

மல்லிக்கீ ரைமணத் தக்காளி பசிதூண்டி
         மந்தமும் பித்தமகற்றும்
   முடக்கத்தான் வாதநோய் முற்றிலும் நீக்கிடும்
          முருங்கையுடல் உரமாக்கிடும்

   வல்லா ரைக்கீரை நினைவாற்ற லைத்தூண்டும்
           வானோர்க்குப் பொருள்சொன்னவா
      வடிவேலி னொளியாகத் தடியோடு புகழ்மேவு
            வடபழனி முருகேசனே.

(23-12-2011 அலுவலகம்)

         

பேராசிரியர் முனைவர் இரா.நாகு -74ஆம் பிறந்த நாள்

எழுபத்து நான்ககவை இன்பமுறக் கண்டார்
தொழுதேத்தும் வாழ்க்கைத் துணையால் - எழுபிறப்பும்
கற்றவர்கள் போற்றிடக் கண்ணன் திருவருளால்
நற்றமிழ்போல் வாழ்வார் நாகு.

(பிறந்த நாள் 25-12-2011. எழுதியது 21.12.2011)

பொங்கல்

தானியங்கள் நல்விளைச்சல் தண்ணளியாம் காய்கனிகள்
ஊனமிலாப் பேருழைப்பின் ஊதியமாம் -தேன்மலராய்
எங்கணுமே கோலங்கள் இன்கதிரோன் புன்னகைக்கப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து.

(வெளியானது "அமுதசுரபி" வெண்பாப் போட்டி. ஜனவரி 2012 பக்கம் 75)

அறுசீர் ஆசிரிய மண்டிலம்

இன்னல் செய்தவ ரெனினும்
   இன்முகம் காட்டிடப் பழகு
துன்பப் படுவதைக் கண்டால்
    துயரது களைந்திட வேண்டும்
அன்பின் திரவியம் பெரிதாம்
      அள்ளிடக் குறைந்திடா தென்றும்
என்றும் அன்பினைப் பெய்தால்
     இறைவன் உன்னுடன் தானே.

(29.11.2011, பிற்பகல் 1.35 மணி. அலுவலகம்)
(வெளியனது 'நற்றமிழ்" புதுச்சேரி. அறுசீர் ஆசிரிய மண்டிலம்-5. வாய்பாடு; குற்றியல் மா+விளம்+விளம்+மா)

ஈதலே என்றும் இனிது

பெட்டி நிறைபணமும் பின்செல்ல ஆளிருந்தும்
கட்டிநெய் பெய்துண்ணல் கையளவே - எட்டியாய்ச்
சாதல் சரியோ வறியோர்க் குதவாமல்
ஈதலே என்றும் இனிது.

(19-6-2012 பிற்பகல் 12.55 மணி.407 லா சேம்பர்)
(வெளியானது "உரத்த சிந்தனை")

காளிகாம்பாள்-1(தம்புச் செட்டித் தெரு, சென்னை)

எங்கும் நிறைந்தருள் ஏற்றம் அளித்திடும்
இங்கெழும் இன்னல் எரித்திடும் -பங்கயத்
தாளிணை போற்றத் தந்திடும் நல்வரம்
காளிகாம் பாள்கடைக் கண்.

(5-6-2012 மாலை 5.30. கோயில்-ஈற்றடி. மற்ற மூன்று 42.பி பஸ்.7.45மணி)

கங்காதீஸ்வரர் கோயில்-2

ஆடலும் பாடலும் அரம்பையர் ஆட்டமும்
              ஆரவார இசையும்
        அடுத்தவர் வருகையை அறியாத ஓர்நிலை
                அவையினிற் பகீதரன்

பாடிமூ உலகையும் வலம்வரும் நாரதர்
               பரமனடி போற்றிவந்தார்
       பரிமள நறுமணம் வீசிடும் சபைதனில்
               பவ்ய மாகநுழைந்தார்

ஈடிலா நாட்டிய இசையினில் மறந்தவன்
            எழுந்து வணங்கவில்லை
     இதுபொறுக் காதநம் நாரத முனிவரும்
             ஏகமாய்ச் சபித்துவிட்டார்

தேடியே பகீரதன் கங்காத ரேசரின்
            திருவடியி லேவீழ்ந்த்தனன்
      திவ்யமாய் ஈசனும் சாபமது தீர்த்தருளித்
              திரும்பிநீ செல்கவென்றார்.

(9-8-2012 மாலை 6.45 மணி. கோயில்)

கங்காதரேஸ்வரர் திருக்கோயில் -1 ( புரசைவாக்கம்)

கங்காத ரேசுவரர் கண்ணனைய நற்றுணை
பங்கஜம் மாளுறை நற்பதியாம் - எங்கள்
புரசையம் பாக்கத்தில் போய்த்தரி சித்தால்
இருவினைகள் நீங்கும்விரைந்து

(9-8-2012 மாலை 6.06 மணி. கோயில்)

வரதராசப் பெருமாள் கோயில் -8 நரசிம்மர்

எங்குளன் என்றே இரணியன் இரைந்ததிர
எங்குமுளன் என்றே பாலகன் உரைத்திடப்
பொங்கிவரும் கோபத்தால் தூணை உதைத்திடவும்
செங்கண்மால் சிங்கவுரு தோன்றியதை என்சொல்வேன்.

தூணை உதைத்திடவும் தோன்றிய நற்சிங்கம்
ஆணிபோல் கூர்நகத்தால் இரணியன் உடல்கிழிக்கக்
காணாத காட்சியினால் ஏழுலகும் பிரமிக்க
நீணிலத்தில் நடந்தானை நெஞ்சுருக என்சொல்வேன்.

(21-4-2012 சனிக்கிழமை இரவு 7.30-7.45. கோயில்)

ஆதி சோலையம்மன் - புரசை

வேலை எதுவுமின்றி வெந்துமனம் புண்ணாகி
ஆலைக் கரும்பானால் ஆதியெம் - சோலைவாழ்
அம்மனைக் கும்பிட்டால் அல்லலெலாம் தீர்த்திடுவாள்
அம்பாளே என்றும் சரண்.

(28-4-2012 சனிக்கிழமை காலை 8.45 மணி. கோயில்

சோலை அம்மன் - புரசை

சோலை வளர்தேவி சூக்குமக் காரிநீ
பாலும் நெருப்பும் பகிர்ந்தளிப்பாய் -சீலமாய்
உன்னைச் சரணடைந்தேன் ஒப்பற்ற சோலையம்மா
என்னையும் காப்பாய் இனிது.

(11-5-2012 வெள்ளிக் கிழமை, காலை 7.56 மணி. கோயில்)

கலை

அறிவியலால் ஆக்கம் அழிவுகள் உண்டாம்
நெறிதவறிச் செல்லவும் நேரும் - குறுநகையாய்
மேலான சிந்தனைகள் மேம்படச் செய்வதென்றும்
காலத்தை வெல்லும் கலை.

(25-3-2009 மாலை 4.40 மணி.-Kerala Samaj School, Chennai.10)

இணக்கம்

வாழ்க்கைப் படகினிலுலும் வாய்த்த குருவிடமும்
ஏழிசை மீட்டவும் ஏற்றமுறத் - தாழ்வின்றி
வில்லாள் படையிடத்தும் வேளாண் எருதிடத்தும்
நல்லிணக்கம் தானே நலம்.

(6-2-2012 இரவு 9.48 மணி. வீடு)

திங்கள், 28 ஜூலை, 2014

உவமைக் கவிஞர் சுரதா

சோற்றுக்கு நல்லுப்பாய்ச் சொல்கின்ற பாட்டினில்
ஏற்றமுடன் வேண்டும் உவமை - போற்றும்
அவர்தமிழோ 'தேன்மழை'யாம் அற்புதமாய்ப் பாடி
உவமையில் வாழ்வார் உயர்ந்து.

(11-7-2006 இரவு 9 மணி. வீடு)

திரு.செல்வ கணபதி

சைவமும் வைணவமும் சாற்றும் முறையறிந்து
ஐம்புலனும் துய்க்க அளித்திடுவார் - மெய்யது
சொல்லில் திருவிளங்கும் சுந்தரத் தோற்றத்தார்
செல்வ கணபதியாம் செப்பு.

(5-11-2008 மாலை 5.59 மணி)

தெய்வம்

அன்னையும் தந்தையும் ஆசானும் தேசமும்
உன்னை உயிர்ப்பிக்கும் தெய்வமாம் - அன்னாரை
வந்தனை செய்வாய் வணங்குவாய் காந்தியை
சிந்தனை செய்வாய் தினம்.

(13-9-2006 நண்பகல் 12 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

திரு.இல.கணேசன்

கண்போன்று நம்முன்னோர் காத்திட்ட நாகரிகம்
கண்பட்டு வீழாமல் கருத்தோடு போற்றுகின்ற
திண்நெஞ்சர் "பொற்றாம ரை"த்தலைவர் கணேசனார்
"பண்பாட்டு நாயகராய்"ப் பதக்கம்பெற் றார்வாழ்க!

(26-7-2011 காலை 10.55 மணி. அலுவலகம்)

வரதராசப் பெருமாள் கோயில் - 7 - கோதண்ட ராமன்

தந்தைசொல் மிக்கஓர் மந்திரம் இலையென்று
         தரணிக்குத் தான்காட்டினான்
    தங்கமும் வைரமும் குவிந்தஅரண் மனைநீங்கித்
         தானேகி னான்கானகம்

எந்தக் குடியினில் பிறந்தாலும் அன்பினில்
           ஈடிணை  யில்லாதவர்
    என்னுடன் பிறப்பெனக் காட்டினான் குகனுடன்
           அனுமன்சுக் ரீவன்மகிழ

கந்தம் கமழ்குழல் சீதயை யன்றியோர்
           கன்னியை நோக்காதவன்
    கட்டியவ ளைக்காக்கச் சென்றனன் இலங்கையில்
            கடும்போரில் வெற்றிகண்டான்

இந்தமா நிலந்தன்னில் மனிதனாய் அவதாரம்
          எடுத்தவன் ராமனானான்
     ஏழுல கும்போற்றும் இராமனின் பெருமையை
          என்றைக்கும் போற்றிமகிழ்வோம்!

(31-3-2012 காலை 9.50 மணி.கோயில். இன்று ராமநவமி)


          

வரதராசப் பெருமாள் கோயில் - 6

பெருந்தேவித் தாயாரின் பேரருளால் நின்று
வரந்தரு வான்வரத ராசன் - கருங்குழல்
நாச்சியார் பாதமலர் நற்கருணை யாம்விழிகள்
மூச்சுள்ள போதேநீ போற்று.

(22-3-2014  இரவு 7 மணி. கோயில்)

ஞாயிறு, 27 ஜூலை, 2014

வரதராசப் பெருமாள் கோயில் - 5

பங்கயத் தாள்துணை பக்தநர சிம்மரே
கங்குல் பகலாய்க் கணக்கின்றி - இங்கெம்மைச்
சேரும் கொடுவினையைச் சீறி யழித்தருளித்
தாரும்நும் பங்கயத் தாள்.

(15-3-2014 சனிக் கிழமை மாலை 6.35 மணி. கோயில்)

வரதராசப் பெருமாள் கோயில் - 4

அண்ணல் துயர்தீர்க்க அன்று கடல்கடந்து
திண்ணமிகு சீதையைக் கண்டிட்டாய் - நண்ணும்
அடியார் இடர்தீர்க்கும் ஆஞ்சநேயா ஏழை
அடியேன் தனையும்காப் பாற்று.

(24-3-2012 காலை 8.45 மணி. கோயில்)

வரதராசப் பெருமாள் கோயில்-3

கருடாழ்வார் மீதேறிக் கண்ணிமைக்கும் நேரம்
இருவினைகள் தீர்த்திட ஏகும் - புரசை
வரதரா சப்பெருமாள் வாய்த்த பெருந்தேவி
திருக்கோயில் செல்வோம் தேர்ந்து.

(11-3-2012 சனிக் கிழமை இரவு 8.30 மணி. கோயில்)

வரதராசப் பெருமாள் கோயில்-2

நெஞ்சிற் கமைதிதரும் நற்றிருக் கோயில்நாம்
தஞ்சம் அடையும் தலமாகும் - கொஞ்சும்
பெருந்தேவி யோடுறை பெம்மான் புரசை
வரதரா சப்பெரு மாள்.

(3-4-2011 சனி மாலை 7.15 மணி. கோயில்)

புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் திருக்கோயில்-1

அல்லல் களைந்திடும் ஆகா தனநீக்கும்
தொல்லை தரும்துயர் போக்கிடும் - நல்ல
வரம்தரும் மண்ணொடு வான்வள மாக்கும்
வரதரா சப்பெருமாள் தாள்.

(22.3.2014 மாலை 7 மணி. கோயில்)

பாரதியார்

பாட்டுக் கொருபுலவன் பாரதியி பாடலெலாம்
நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லனவாம் - கேட்பதுடன்
எத்துணைநாள் கற்றாலும் இன்பம் செவிநிறையும்
தித்திக்கும் செந்தமிழ்த் தேன்.

(29-9-2008 காலை 11.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" அக்டோபர் 2008)

தமிழ் மாருதம்

சிற்றிதழ்கள் தாய்மொழிச் செம்மைப் பணியாற்றும்
பெற்றியதை எண்ணிப் பெருமைமிகும் - நற்றமிழ்
மாருதமோ தீந்தமிழை மாந்தக் கொடுத்துலகில்
சீரியதாய் நிற்கும் சிறப்பு.

(30-9-2008 செவ்வாய் பிற்பகல் 3 மணி. அலுவலகம்)
(வெளியானது "தமிழ்மாருதம்"-மதுரை)

குளவி கொடுக்குமோ தேன்

இடுக்கண் களையார் இருந்தென்ன நட்பாய்
உடுக்கள் ஆமோ நிலவாய் - கொடுக்கால்
அளவிலாத் துன்பம் அளித்திடும் சொல்செங்
குளவி கொடுக்குமோ தேன்.

(6-9-2008 சனி காலை 7.10 மணி. வீடு)
(வெளியானது "அமுதசுரபி")

கவிஞர் இளந்தேவன் மகள் திருமணம்

"அழகுமலர்" "சத்தீஷ்"  அருளிறையால் நெஞ்சம்
எழிலுறவே கைப்பிடித்தார் இன்று - பழகுதமிழ்
'சந்திர காந்தி' 'இளந்தேவன்' பைங்கொடியைச்
சொந்தமென வாழ்த்திடு வோம்.

(திருமணம் 4-9-2008. வரவேற்பு 5-9-2008)
(எழுதியது 5.9.2008 பகல் 12.10 மணி. அலுவலகம்)

அமெரிக்கா

ஒலிம்பிக்கில் தங்கம் உயர்தரமாய்க் கல்வி
பலவகையில் நற்பழக் கங்கள் - மலைபோல்
நமது நிலையுயர நாடெல்லாம் பேசும்
அமெரிக்கா வைச்சென்று பார்!

(வெளியானது "பொதிகை மின்னல்" செப்டம்பர் 2008 பக்கம் 12)

குண்டூசி

பல்குத்த லாம்தாள்கள் பக்குவமாய்க் கோக்கலாம்
துல்லியமாய்ச் சின்னத் துளையிடலாம் - வல்லவன்கைக்
கொண்டாலோர் ஆயுதமாம் குப்பாயப் பொத்தானாம்
குண்டூசி யின்பயனாம் கூறு.

(24-8-2006 மாலை 6.25 மணி. அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை")

ஓவியக் கவிதை

குனிந்து மகளிரெலாம் கொத்தாக நாற்றைத்
தனியாய்ப் பிரிப்பர் தரமாய் - நனிசெய்யில்
நட்டும் பயிவிளைந்து நற்கதிர்கள் தாம்குனிந்து
வட்டில் உணவாகும் வாழ்த்து.

(21-8-2006 காலை 11.20 அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" ஓவியப் பாட்டு)

கொக்குக்கு மீனே குறி

யார்நிலத்தில் காய்கறிகள் ஏராளம் என்றறிந்தே
சீர்கெடுக்கக் காத்திருப்பர் சிற்றறிவார் - போர்வலையில்
சிக்கவைத்து வல்லரசார் செய்யும் கொடுமையதோ
கொக்குக்கு மீனே குறி.

(10-8-2006 காலை 9.55 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

வாழ்ந்திடலாம் வா

வெண்ணிலவு தேய்ந்தும் விளங்கும் முழுமதியாய்
விண்ணதனில் தோன்றிடும் விந்தையது - கண்மணியே
வீழ்ந்திடுவோர் ஓர்நாள் விழித்தெழுவர் விண்ணதிர
வாழ்ந்திடலாம் ஊக்கமுடன் வா.

(9-8-2006 காலை 11.25 மணி . அலுவலகம். இன்று பெளர்ணமி)

பைந்தமிழில் பாப்புனையப் பார்

சிறுகதைகள் நாடகங்கள் சீர்கட் டுரைகள்
திறமையுடன் ஆக்கத்தேர்ந் துள்ளாய் - நறுமலராய்
மைந்தனே கம்பனை மாந்தி யதில்திளைத்துப்
பைந்தமிழில் பாப்புனையப் பார்.

(10-4-2008  பிற்பகல் 2.20 மணி. அலுவலகம்)
(வெளியானது "பன்மலர்")

தென்னாடு

வானூர்தி ஏறி வளங்கண்டாய் நாடுகளில்
தேனூறும் செய்தி தெரிந்திடுவாய் - மானனையாய்
எந்நாடு சென்றாலும் எங்கள் திருநிறைத்
தென்னாடு போலில்லை யாங்கு.

(9-4-2008 அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்")

கலைமாமணி விக்கிரமன் - 81

பண்பாய்க் கதையெழுதும் பாங்காளர் விக்கிரமன்
எண்பத்தொன் றாமகவை எய்துகிறார் - விண்போல்
வளந்தருவாள் அன்னை வற்றாமல் எந்நாளும்
இளங்கண்ணன் வேண்டுதலை ஏற்று
.
(2-4-2008 பகல் 1 மணி. தியாகராய நகர் பேருந்து நிலையம், சென்னை.17)

மத்திய சட்ட அமைச்சர் வேங்கடபதி

சட்டம் இலக்கியங்கள் சங்கத் தொகைநூல்கள்
அட்டியின்றிப் பேசல் அரிதாமே - நட்பாய்
இடனறிந்து தேன்சுவையாய் எங்கள் திருவேங்
கடபதிபோல் செந்தமிழில் பேசு.

(27.3.2008 தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய அரிமா யுவராச அமிழ்தன் 47 ஆம் பிறந்தநாள் விழாவில் வேங்கடபதி பேசினார்.28.3.2008 காலை 7.30 மணிக்கு வீட்டில் எழுதி அவருக்குத் தொலைபேசியில் வாசித்துக் காட்டினேன்.-944449552;  09868239552)

கற்றல் கற்பித்தல் கடன்

காசினியி லேபிறந்து கண்மூடும் நாள்வரையும்
யோசித்தால் நாம்கட னாளிகளே - காசிலார்க்கு
விற்றல் கடனாகும் மாணவர் ஆசிரியர்
கற்றல் கற்பித்தல் கடன்.

(18.3.2008 செவ்வாய் மாலை 3.50 மணி. அலுவலகம்)
(வெளியானது "பன்மலர்" வெண்பாப் போட்டி-84) 

மாலையது தந்த வனப்பு

சிட்டுக் குருவியாய்ச் சிற்றோடை யாட்டமிடும்
கட்டழகி தாமரையாய் நாணினாள் - பட்டெழில்
சேலை பளபளக்கச் சிற்றிடைக்(கு) இன்றுமண
மாலையது தந்த வனப்பு!

(18-3-2008 செவ்வாய்  பிற்பகல் 1.50மணி. அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" வெண்பா அரங்கம்-11)

இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து

அன்பே பெருங்கோயில் ஆட்கொள்ளும் மாநிதியாம்
துன்பக் கடல்கடக்கும் தோணியதாம் - அன்பரசை
என்புருகப் பாடியிவண் எல்லோரும் வாழ்கவென
இன்புறுவோம் நல்லறத்தில் தோய்ந்து.

(10.3.2008 மாலை 4.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி")

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

ஈழத் தமிழர் இரவுபகல் சாகின்றார்
பாழும் இலங்கைப் படையினரால் - யாழ்ப்புலியாய்
ஈண்டெழுந்து போரிடுக எங்கள் சுபவீர
பாண்டியன்போல் மோதிடுக பாய்ந்து!

(26-3-2008 .காலை 9.30.வீடு.-பிரபாகரன் சிங்களத் திரைப்பட மொழிமாற்றம் குறித்து சுபவீ  காலையில் தொலைக்காட்சியில் போர்க்கொடி. அப்போது எழுதி தொலைபேசியில் வாசித்தேன்."வழக்கறிஞரே, வெண்பா ஓட்டம் நன்றாக உள்ளது" என்றார்.

பலவிகற்ப இன்னிசை சிந்தியல் வெண்பா-5

ஆலம் விழுதூஞ்சல் அத்திப் பழம்பறித்தல்
ஆற்றில் குதித்தாடல் எங்கோ ஒளிந்துகொளல்
இன்பம் இளமையது வாம்.

(27-3-2008 காலை 10.40 மணி. அலுவலகம்0
(வெளியானது "நற்றமிழ்" ஏப்ரல் 2008)

சனி, 26 ஜூலை, 2014

தூரிகைக்கு வேண்டும் துணிவு

கெஞ்சுவதும் தாங்குவதும் கேடர்களை மேம்படுத்தும்
அஞ்சாமல் நிற்றல் அழகாகும் - கொஞ்சுமிளங்
காரிகைக்குக் கற்பெனவும் காளையர்க்கு வீரம்போல்
தூரிகைக்கு வேண்டும் துணிவு.

(23-2-2008 சனி மாலை 4.25. அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" மார்ச் 2008 பக்கம் 33)

பெண்களே கண்கள்

உன்னைச் சுமந்திவ் வுலகறியச் செய்குவாள்
தன்னைப் பெரிதெனப் பேணாள் - எந்நாளும்
எண்ணிலாத் தொண்டால் இளைத்த முதுமையிலும்
பெண்களைக் கண்களாய்ப் பேண்.

(17-2-2008 பிற்பகல் 2 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" வெண்பாப் போட்டி-83. மார்ச் 2008 பக்கம்25)

தென்கச்சி சுவாமிநாதன்

வேடிக்கை யாய்ப்பேசி விந்தைக் கதைசொல்லல்
வாடிக்கை தென்கச்சி வாணர்க்கு - தேடியிவண்
நாமறியச் செய்திகளை நாளும் வழங்கும்நம்
சாமிநாதன் ஒப்பார் இலர்.

(5-3-2008 இரவு 7.05 மணி " பொற்றாமரை" நிகழ்ச்சி-பாரதியார் இல்லம்,திருவல்லிக்கேணி. இந்த வெண்பாவை தலைவர் இல.கணேசன் மேடையி வாசித்தார்) 

ஜெயா டி.வி.ஸ்ரீஹரி

சீர்கவி நாளும் சிறப்பாய்ச் செப்பிடுதல்
ஆர்க்கும் கிடைக்கா அரும்வாய்ப்பாம் - பார்போற்றும்
கோயில் வரலாறு கும்பிடும் தெய்வங்கள்
ஆய்ந்தறிந்து சொல்லல் அழகு.

(5-3-2008 மாலை 7மணி "பொற்றமரை" நிகழ்ச்சி. பாரதியார் இல்லம்,திருவல்லிக்கேணி)

காத்திருந்து முன்னேறு

அரசியலில் உன்நாள் வருமுன்னர் வீணே
கரவொலி செய்தாட்டம் போடாதே - பெருந்தலைகள்
உன்முன்னே காத்திருக்கும் உய்த்தறிவாய் எந்நாளும்
நன்னிலையைக் காத்திடுமுன் னேறு.

(17-3-2008 மாலை 4 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" ஏப்ரல் 2008)

இடமறிந்து செல்க

நாடி தளர்ந்து நரம்பு முறுக்கிழந்து
ஓடிப் பணிசெய்ய ஒவ்வாது - நாடி
உடலும்நல் உள்ளமும் ஒத்திசைவாய்ச் செய்யும்
இடமறிந்து செய்கவே இன்று.

(வெளியானது "பொதிகை மின்னல்" மார்ச் 2008. பக்கம் 6)

திரு.இல.கணேசன் - 63

"பொற்றா மரை"கண்ட புண்ணியராம் எவ்விடத்தும்
சற்றும் பிழைகாணில் சாடிடுவார் - நற்றாய்
அனையர் அகவை அறுபத்து மூன்றாம்
கனிவுடன் பாரதமே காண்.

(16-2-2008 வீடு- இன்று இல.கணேசன் பிறந்த நாள்)

வறுமையை விரட்டு

வேளாண்மை விஞ்ஞானம் விந்தைத் தொழில்நுட்பம்
தாழாது செய்து தமிழ்வளர்த்தால் - தோழனே
நாடுவளம் பெற்றிடும் நன்றாய் வறுமையை
ஓடச்செய் வோமென் றுணர்.

(22-7-2005 பகல் 12.40. அலுவலகம்)
(வெளியானது "தும்பை")

பாரதியார்

பாப்பா தொடங்கிநம் பாரதத் தாய்கதை
காப்பியமாய்ச் சொல்வான் கவிதையில் - யாப்பில்
புதுயுகங் கண்டநம் பாரதி யின்சொல்
இதமுடன் நெஞ்சில் நிறுத்து.

(5-12-2006 செவ்வாய் பிற்பகல் 3.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்")

பாட்டொன்று பைந்தமிழில் பாடு

கானகத்துப் புள்ளும் கறவைகளும் கண்ணனது
கானத்தில் மெய்மறக்கு மென்றிடுவர் - தேனமுதாய்
கேட்டுக் கிறுகிறுக்க வேண்டுமடி மெல்லிடையே
பாட்டொன்று பைந்தமிழில் பாடு.

(28-11-2006  செவ்வாய் பிற்பகல் 1.35 மணி. அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" டிசம்பர் 2006)

ஆசுகவி பழனி இளங்கம்பன்

எப்போது மின்கவிதை யாக்கும் இளங்கம்பன்
கைப்பேசி கண்டேன் களித்து!

(மின்கவிதை=மின்னலைப்போல் விரைவாய், ஆசுகவி;- இன்கவிதை=இன்சுவைப்பா)
(22-11-2006 புதன் பகல் 12 மணி. வீடு)

ஓவியப் பாட்டு-10

வீட்டில் எலியாய் வெளியில் புலியென
நாட்டில் பலபேர் நடப்பராம் - வேட்டை
மனிதரைக் கண்டு மனங்கலங் காதே
தனியாய் எழுந்தெதிர்ப் பாய்.

(20-11-2006 திங்கள் பகல் 12 மணி. அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" டிசம்பர் 2006)

வற்றாமல் எந்நாளும் வாழ்

எறும்புக்கும் யானைக்கும் இன்னல்கள் நேர்ந்தால்
விருப்புடன் நீக்கவே வேண்டும் - கருத்துடன்
உற்றார்மற் றார்பேதம் ஒன்றின்றி யேமனம்
வற்றாமல் எந்நாளும் வாழ்.

(20-11-2006 திங்கள் 12.50 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி" டிசம்பர் 2006)

கண்ணியம் கலிவிருத்தம்-5

உமிழ்நீர் சுரப்பின் உடல்நலம் நன்றாம்
கமழ்மலர் சூடிடில் காதலி மகிழ்வாள்
அமிழ்தெனப் பிறரிடம் அன்பாய்ப் பழகு
தமிழாய் வாழ்வாய் தரணியில் தழைத்தே!

(20-11-2006 பிற்பகல் 3 மணி. அலுவலகம்)
(வெளியானது "கண்ணியம்" டிசம்பர் 2006)

சனி, 19 ஜூலை, 2014

குறள் வெண்பா - 1

நீள்முடியும் சேல்விழியும் நேர்நுதலும் வெண்பல்லும்
யாழொலியும் என்நங்கைக் குண்டு.

(20-11-2006  பிற்பகல் 3.30. அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்")

அமெரிக்க-ஈராக் போர்

எண்ணெய் வளங்கண்டார் இல்லா ததைச்சொன்னார்
மண்ணைக் கவர மனங்கொண்டார் - திண்மையனின்
பேரழிக்க எண்ணினார் பேயாய்க் கடல்கடந்தார்
சீரழித்தார் போர்விளைத்தார் சேர்ந்து.

(8-11-2006 புதன் காலை 1.55. அலுவலகம்)
(வெளியானது "தும்பை")

வெள்ளி, 18 ஜூலை, 2014

வள்ளலார்

சமரச சுத்தநற் சன்மார்க்கம் காட்டும்
அமைதியை மெய்ம்மையை அன்பை - நமதருமை
வள்ளலார் பாடும் வழியினிற் சென்றிட்டால்
எள்ளளவும் இல்லை இடர்.

சமரச சுத்தநற் சன்மார்க்கம் சேர்ந்தால்
அமைதியாய் வாழலாம் அன்பாய் - நமதருமை
வள்ளலார் காட்டும் வழியினில் சென்றிட்டால்
எள்ளளவும் இல்லை இடர்.

(9-10-2006  பகல் 12.10 மணி. அலுவலகம்)

முன்னேற்றம் காண்போம்

கடல்கடந்து நம்மினத்தார் கைசோர்ந்து போக
உடலுழைப்பை நல்கிடுவார் ஓய்ந்தே - அடலேறே
எந்நாளும் நம்தமிழர் இன்னல் களைந்தினிதாய்
முன்னேற்றம் காண்போம் முனைந்து!

(29-9-2006 வெள்ளி காலை 9.05 மணி . வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" அக்டோபர் 2006)

வஞ்சி விருத்தம்-19

கைகளின் பயனோ கணக்கிலவாம்
மெய்வலி வுடனே உழைத்திடலாம்
செய்தொழில் எதுவும் தெரியாமல்
உய்தலிவ் உலகில் எளிதன்று!

(29-9-2006 காலை 8.48 மணி. வீடு)
(கூவிளம் + புளிமா + காய்) ("ந்ற்றமிழ்" அக்டோபர் 2006)

ஓவியப் பாட்டு

துள்ளிவிளை  யாடும் துடிப்பான பையாஉன்
பள்ளியிலோ புத்தகப்பை பாரம்தான் - எள்ளளவும்
கேட்டிற் கிடமின்றிக் கிஞ்சித்தும் அஞ்சாநீ
நாட்டை உயர்த்தும்நற் றூண்!

(18-9-2006 காலை 11.45 மணி அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை"  அக்டோபர் 2006)

உழைப்பால் உயரும் உலகு

உலகப்போர் தன்னில் உருக்குலைந் திட்டாலும்
இலகுவாய் சப்பானின் ஏற்றம் - மலைபோல்
உழைப்பினில் மக்கள் உறுதியாய் நின்றார்
உழைப்பால் உயரும் உலகு!

(26-4-2006 பகல் 12.50 மணி அலுவலகம்)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" மே 2006)

வஞ்சி விருத்தம்

யார்தான் வருவார் எனக்குழம்ப
தேர்தல் போரும் முடிந்ததுவே
சீராய் ஆட்சி புரிந்திடுக
பாரில் நம்மோர் பயனுறவே!

(26-4-2006 பிற்பகல்1.05 மணி. அலுவலகம்- வெளியானது  "நற்றமிழ்")

எழுந்திடு மகிழ்வுடன்

மனிதப் பிறவியின் மாண்பை உணர்ந்தே
இனிதாய்ப் பிறர்க்குநற் சேவைசெய் - கனிவாய்
மொழிந்திடு என்றும் மூத்தோர் பணிவாய்
எழுந்திருப் பாய்மகிழ் வோடு.

(10-12-2007)
(வெளியானது "பொதிகைத் தென்றல்" ஜனவரி 2008)

எல்லோரும் வாழ்க இனிது

செய்யாதவை நீக்கிச் சிற்றெறும்புக் கும்கனிவாய்
வெய்யோன் கனல்நீக்கி  ஊர்க்குதவி - மெய்யான
நல்லின்பம் பெற்று நறுமலர்ப்பா தத்தருளால்
எல்லோரும் வாழ்க இனிது.

(4-12-2007  பகல் 12.20 அலுவலகம்)

செய்யா தவைநீக்கிச் சிற்றுயிர்க்கும் அன்புகாட்டி
உய்யும் வகையறிந்து ஊர்க்குதவி - மெய்யான
நல்லின்பம் பெற்று நறுமலர்ப்பா தத்தருளாளால்
எல்லோரும் வாழ்க இனிது.

(4-12-2007 பிற்பகல் 2.40 அலுவலகம்)

"அமுதசுரபி" வெண்பாப் போட்டி - முதற்பரிசு

அன்பு மனைவியும் ஆற்றல்மிகு சேய்களும்
துன்பமிலா நல்லுடலும் தூயராய் - என்பிலிக்கும்
ஒல்லும் வகையுதவும் உள்ளமும் பெற்றிறையால்
எல்லோரும் வாழ்க இனிது!

(12-12-2007 இரவு 9.25. வீடு)
( வெளியானது: "அமுதசுரபி" ஜனவரி 2008 -முதல் பரிசு பெற்றது- ஈற்றடி வழங்கியவர் நெல்லை ஆ.கணபதி)

இருவிகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

கூசாமல் பொய்சொல்வார் குற்றம் புரிந்திடுவார்
பாசமிக வென்றே பசப்பிடுவார் - தேசத்தைக்
காட்டியே பெற்றிடுவார் காசு.

(26-11-2007 பிற்பகல் 3.55 அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்"  டிசம்பர் 2007)

ஓவியப் பாட்டு

ஒன்றுக்கு மூவர் ஒருகுளியல் போடுதற்கு
நின்றே களித்திடும் நீள்கொம்பன் - நன்றாய்ச்
சறுக்கு மரமாடச் சாய்ந்துகை நீட்டிப்
பொறுமையுடன் நீரா டிடும்.

(18-10-2007 இரவு 11.45 வீடு)
(வெளியானது "உரத்த சிந்தனை" டிசம்பர் 2007

வியாழன், 17 ஜூலை, 2014

கல்விக் கண்

கண்மூடித் தொல்பழக்கம் மண்மூடிப் போகவென
ஒண்மதியாய் வள்ளலார் ஓதிட்டார் - எண்ணெழுத்தாம்
சொல்லின் பொருளுணர்ந்து சூரியனாம் செந்தமிழில்
கல்விக்கண் பெற்றுவகை காண்.

(18-11-2007 இரவு 11.40 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" டிசம்பர் 2007)

பொன்னினும் மேலானவன்

இருப்பதை இல்லையென் றென்றறி வானே
கருப்பொருள் கண்டின் புறுவான் - விருப்புடன்
தன்பணி செய்பவன் தர்மம் தழைத்திட
பொன்னினும் மேலா னவன்.

(10-11-2007 காலை4.30 மணி. வீடு)
(வெளியானது "பொதிகை மின்னல்" டிசம்பர் 2007)

குறள்வெண்பா-12

அடிதடிப் போராட்டம் ஆள்வோர் பணத்தில்
எடுபிடிகள் செய்தனர் கூத்து!

(23-10-2007  பிற்பகல் 1.55.மணி, அலுவலகம்)
(வெளியனது "நற்றமிழ்" தி.ஆ.20ஙஅ  நளி-17.10.2007 பக்கம்28)

பண்புடன் வாழப் பழகு

ஒழுக்கத்தை நம்முயிரின் மேலாய் மதித்தே
விழுப்பம் பெறச்சொன்னார் அய்யன் - முழுமதியாய்
கண்ணழகில் மூக்கழகில் கர்வப்ப டாமல்நீ
பண்புடன் வாழப் பழகு.

(23.10.2007 பகல் 12.40 மணி- அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" தி.பி.2038 நவம்பர் 2007 பக்கம் 14)

"கவிதை உறவு" - வரவு

"கவிதை உறவு"க்குக் காத்திருந்தேன் பன்னாள்
உவகையுற் றேன்வரக் கண்டு - சிவிகையில்
ஏற்றிச் சிறப்பிக்கும் ஏர்வாடி யார்பணியைப்
போற்றுக பாட்டால் புகழ்ந்து.

(23-10-2007 பகல் 12.50 மணி. அலுவலகம்)

செவ்வாய், 15 ஜூலை, 2014

ஓவியப் பாட்டு

முண்டாசு கட்டி முழுச்சுமையைத் தானேற்றுப்
பெண்டாட்டி பிள்ளைகளைக் காக்கின்றான் - உண்டிட
ஓரகப்பைச் சோறும் ஒருகுவளைத் தண்ணீரும்
யாரளிப்பார் வேலைசெய் யாது?

("உரத்த சிந்தனை" ஓவியப் பாட்டுப் போட்டி. நவம்பர் 2007 இல் வெளியானது. ப்க்கம்.49)

உழைப்பு

ஓயாது தன்பணியை ஊக்க முடன்செய்வான்
சாயாது வெற்றி சமன்செய்வான் - நேயம்
தழைக்கும் படிசெய்யும் தாளாளர் போற்றி
உழைப்புக்கும் மிஞ்சுமோ ஊழ்!

(17-10-2007 காலை 8.45 மணி. வீடு)
(வெளியானது "பன்மலர்" நவம்பர் 2007 பக்கம் 23)

திட்டம் நிறைவேறட்டும்

அணுசக்தி ஒப்பந்தம் சேதுகடல் திட்டம்
பிணக்கின்றிச் செய்தல் பெருமை - இணக்கமாய்
இந்தியர் ஒன்றாய் இணைந்திட்டால் என்றும்
எந்தத் தடையுமி ராது!

(9-10-2007 காலை 11.50 மணி. அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" நவம்பர் 2007)

நெல்லை குமார.சுப்பிரமனியம்-70

எழுபதில் கால்வைத்(து) இளைஞனாய்ச் சுற்றும்
பழுதிலா நண்பரைப் பாரும் - முழுவதும்
மற்றோர்க் குதவிடும் சுப்பி ரமணிய
நற்றமிழ் வாணரை வாழ்த்து.

(9-10-2007 காலை 11.20 மணி. அலுவலகம்)
(நெல்லை குமார.சுப்பிரமணியம் 12.7.2007 இல் 69 அகவை நிறைவு - 854, 2-ஆம் தெரு , டி.வி.சுந்தரம் நகர், திருநெல்வேலி - 627011)

பாரதி

பாரதிபோல் தம்துறையில் பாங்குடைய மேன்மக்கள்
பாரிதனில் என்பெற்றார் வாழுங்கால் - சீராய்
சிலைவைப்பர் மாண்டபின் செந்திறத்தார் என்றே
உலகத்தார் செய்வர் சிறப்பு!

(7-10-2007 காலை 5.40 மணி. வீடு)
(வெளியானது "அமுதசுரபி" நவம்பர் 2007)

குறளே மறையெனக் கூறு

ஒன்றே குலமாம் ஒருவனே தேவனென்(று)
அன்றே அறவழி செய்தது - நன்றாய்ப்
பிறமொழி யாளரும் போற்றும் தகைசால்
குறளே மறையெனக் கூறு!

(25-9-2007 செவ்வாய் காலை 10.20 மணி. அலுவலகம்)

திங்கள், 14 ஜூலை, 2014

குறள்வெண்பா

கடவுள் பெயர்சொல்லிக் கட்சிகள் செய்தால்
இடராவர் நாட்டுக் கவர்.

(25-9-2007 காலை 10.05 மணி. அலுவலகம்)
(வெளியானது "நற்றமிழ்" துலை-18.10.2007 பக்கம் 30)

ஓவியப் பாட்டுப் போட்டி-22

தள்ளாத போதும் தளிர்க்கன்றை நட்டுவைத்துப்
பிள்ளையெனப் போற்றும் பெரியவர் - எள்ளளவும்
அன்னார் பயனடையார் ஆனாலும் தம்மக்கள்
பின்னாள் அடைவார்நற் பேறு!

(18-9-2007 காலை 9.40 மணி. அலுவலகம்)
(வெளியானது "உரத்த சிந்தனை" அக்டோபர் 2007)

வன்முறையை வேரறுப்போம் வா

சுடுகாடாய் பூமி சுழன்றிடவே பாரில்
கெடுமதியோர் போடுகின்றார் திட்டம் - அடலேறே
புன்மதியார் தீமை பொசுங்கிடவே நீண்டகன்ற
வன்முறையை வேரறுப்போம் வா!

(17-9-2007 காலை 11.55 மணி அலுவலகம்)
(வெளியானது "புகழ்ச்செல்வி" அக்டோபர் 2007 பக்கம் 18)

வானம் வசமாகும்

மெய்வருந்தப் பாடுபடல் மேலாகும் காலத்தில்
செய்வினைகள் நல்லிடத்தில் சீராகும் - கைகட்டி
ஏனோ இருக்கின்றாய் வீணே முயற்சித்தால்
வானம் வசமாகும்வா1

(எழுதியது 17-9-2007 காலை 11.10 மணி அலுவலகம்)
(வெளியானது "பன்மலர்" அக்டோபர் 2007 பக்கம் 25)

நல்லாட்சி வேண்டும்

உற்றார்வேண் டாரென்றே ஓர்ந்துகண் ணோடாது
நற்றிறத்தார்க் கேற்றபணி நல்கிடுக - மற்றோர்க்குப்
பொல்லாங்கு செய்யாமல் புத்துணர்ச்சி யூட்டுகின்ற
நல்லாட்சி வேண்டும் நமக்கு.

(வெளியானது "பன்மலர்" செப்டம்பர் 2007 பக்கம் 26)

வன்முறையின் வேரறுப்போம் வா

அப்பாவி மக்கள்தமை ஆயுதங்கள் போர்க்காலத்
துப்பாக்கி யால்சுட்டுக் கொல்கின்றார் - இப்பாரில்
அன்போங்கி மக்களெலாம் அல்லலின்றி வாழ்ந்திடவே
வன்முறையின் வேரறுபோம் வா!

(எழுதியது 10-9-2007 பிற்பகல் 2.10 மணி அலுவலகம்)
(வெளியானது "பொதிகை மின்னல்" அக்டோபர் 2007 பக்கம் 9)

காமராசர்

கற்றறியா மேதையவர் காங்கிரசின் ஆலமரம்
பற்றென்றால் பாரதத்தின் மீதேதான் - நற்செயலில்
தாமதம் செய்யார் தமிழ்நாட்டின் நல்முதல்வர்
காமராசர் காலமே பொன்!

(வெளியானது "பொதிகை மின்னல்" ஆகஸ்ட் 2007 பக்கம் 10)

நினைவெல்லாம் தோய்தலே நோன்பு

ஐம்பொறியும் ஐம்புலனும் ஆங்கடங்கி ஆனந்த
மெய்ஞ்ஞானம் பெற்றிடுதல் மேலாமே - தெய்வம்
நினதுகுலம் காத்திடும் நிர்மலமாய் ஈசன்
நினைவெல்லாம் தோய்தலே நோன்பு!

(எழுதியது செப்டம்பர் 7, 2007 பகல் 12.15 மணி. அலுவலகம்)
(வெளியானது "அமுதசுரபி" அக்டோபர் 2007 பக்கம் 76)

"செந்தாமரை" விருது பெற்ற பாட்டு

எந்திரப் பதுமை இயங்குது நன்றாய்
மந்திரச் சொல்போல் சொன்னதைச் செய்யுது
தொந்தர வேதும் அதனால் இல்லை
வந்திடும் விரைவில் நம்வீ டுகளில்!

(வெளியானது "நம் உரத்தசிந்தனை" செப்டம்பர் 2007. பக்கம் 21)
(உரத்தசிந்தனை வெள்ளிவிழா தொடக்கம்  27-1-2007. பலகலைச் செலவர் இரமணின் ஓவியங்களுக்குக் கடந்த ஓராண்டில் உரத்தசிந்தனையில் பரிசு பெற்ற பாடல்களில் சிறந்தது எனத்தேர்வு பெற்று "செந்தாமரை" விருது பெற்றது- ஓவியப்பாட்டுப் போட்டி-21 க்கு நான் எழுதியது. விழா நடைபெற்ற அரங்கம் மயிலை ஆர்.கே.சாமி ஹால். காலை 10.25 மணி. முன்னாள் நீதியரசர் ஜெகதீசன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்...)

அரிமா கிருத்திவாசன் - 61

அன்பென்னும் கட்டடங்கள் ஆயகலைக் கூடங்கள்
இன்பமுடன் செய்திடுவார் எம்நண்பர் - பொன்பொருளை
ஓர்பொருட்டாய் எண்ணார் உயர்கீர்த்தி வாசனார்
சீரரிமா என்றுவந்து செப்பு!

(எழுதியது 27-8-2007 திங்கள் பகல் 12.30 மணி, அலுவலகம்)
(பிறந்தநாள் 19.9.2007)

பெரியாரால் நாம் பெற்ற பேறு

சமமாய் அமர்ந்திருத்தல் சாதி மறுத்தல்
நமதே பணியொதுக் கீடு - அமையும்
திருமணம் தன்மதிப்பாம் தீண்டாமை வீழ்ச்சி
பெரியாரால் நாம்பெற்ற பேறு.

(27-8-2007 பகல் 12.15 மணி)
(வெளியானது; "மீண்டும் கவிக்கொண்டல்"  செப்டம்பர் 2007)

அவையில் சமமாய் அமர்ந்திடுதல் கல்விச்
சுவையை எல்லோரும் கொள்ளல் - உவப்பாய்ப்
பெரும்பணியில் நம்மோர்க்கே முன்னுரிமை பாங்காய்ப்
பெரியாரால் நாம்பெற்ற பேறு.
(27-8-2007)

குறள் வெண்பா

பூனை உறங்கிடும் பொங்கிப் பலநாளாம்
ஆனால் வயிற்றுக்குள் தீ!

(எழுதியது:27-8-2007)
(வெளியானது: "நற்றமிழ்"  - குறள்வெண்பா-10 -      அக்டோபர் 2007 )

சனி, 12 ஜூலை, 2014

முன்னாள் ஆளுநர் அரிமா என்.எஸ்.சங்கர் மணிவிழா

மணிவிழாக் காணும் அரிமா சங்கர்
துணையும் நட்பும் சுற்றமும் சூழ
மணிமுடி தரித்த மன்னரைப் போன்றே
இணையிலா தினிதாய் வாழ்க வாழ்கவே!

(22-8-2007 மாலை 6 மணி. வீடு.-மணிவிழா எம்.எஸ்.ஆர்.ஹால்
புரசைவாக்கம்,சென்னை-.84 மாலை)

சொல்லில் அடங்குவதோ சொல்

ஐயிரு திங்களில் அன்புச் சுமையது
பையவே மண்ணில் பதிந்தது - மெய்மகிழ
செல்லக் குழந்தை சிரிப்பும் குறும்புகளும்
சொல்லில் அடங்குவதோ சொல்.

(22-8-2007 காலை 11.10 மணி. அலுவலகம்)

(வெளியானது: "புகழ்ச்செல்வி" செப்டம்பர் 2007. பக்கம் 17)

பேராசிரியர் ஆறு.அழகப்பன் 71

"தமிழ்ச்சுரங்கம்" போன்ற தகைசால் அமைப்பில்
தமிழ்ப்பணி யாற்றவா ரீர்நீர் - அமிழ்தாய்
எழுபத்தொன் றாமகவை இன்றடி வைக்கும்
அழகப்ப னார்காட்டு ஆறு!

(10-8-2007 காலை 8.30 மணி. வீடு)

மனிதனாய் வாழ்தலே மாண்பு

நாய்க்குணம் பேய்க்குணம் குள்ள நரிக்குணம்
போய்த்தொலைந் தாலது புண்ணியம் - வாய்த்தால்
இனியது செய்தே எவர்க்கும் உதவி
மனிதனாய் வாழ்தலே மாண்பு!

(எழுதியது 8-8-2007 பிற்பகல் 1.30 மணி. அலுவலகம்)
(வெளியானது: "அமுதசுரபி" செப்டம்பர் 2007)

காட்டில் மலையில்கடுந்தவம் செய்வதால்
நாட்டுக் கதுபயன் நல்குமோ - வீட்டில்
இனியனாய் மற்றோர்க் கியன்றது செய்து
மனிதனாய் வாழ்தலே மாண்பு!

பழனி இளங்கம்பனின் "புதுத் தமிழ்ப் பூக்கள்"

மதுகரம் நல்வாய் மடுக்கும்
   மல்லிகை முல்லை போன்ற
"புதுத்தமிழ்ப் பூக்கள்" நூறு
   பொன்போல் கோத்து வைத்து
'பொதுமறைப் புகழ்மா லைகள்'
  புலமைவல் இளங்கம் பன் தான்
இதமுடன் தமிழுக் கீந்தான்
  இன்சுவைப் பாக்க ளாலே!

(எழுதியது 7-8-2007. இரவு 8 மணி. வீடு)

வீரர்களைப் போற்றிடுவோம்

உடல்பொருள் ஆவியை ஒப்பற்ற தேச
விடுதலைக்காய்  ஈந்தோர் உயர்ந்தோர் - அடலேறே
சும்மாவா பெற்றோம் சுதந்திரம் வீரர்களை
நம்முயிராய்ப் போற்றிடுவோம் நன்கு!

(எழுதியது 4-8-2007 பிற்பகல் 2.45 மணி. வீடு)
(வெளியானது: "பொதிகை மின்னல்" செப்டம்பர் 2007)

பழனி இளங்கம்பனின்" பொதுமறைப் புகழ்மாலை'

"பொதுமறைப்பு கழ்மாலை" பொன்போல்நூ றாக
இதுவரையில் யார்படைத்தார் ஈங்கு - மதுமலராய்
எங்கள் இளங்கம்பன் ஏற்றமுறச் செய்தளித்தார்
பொங்கும் தமிழ்ம்ணக்கும் பூ!

(எழுதியது: ஆகஸ்ட் 3, 2007 காலை 10 மணி-வீடு)

ஓவியப் பாட்டு

இருகரம் கூப்பி வேண்டுவார் வாக்குகள்
மறுமுறை வாரார் வென்றபின்
ஒருவிரல் காட்டி மிரட்டுவார் இலஞ்சம்
தருகிறேன் என்றால் மகிழ்வார்!

(வெளியானது - ஒவியப்பாட்டு 20-"நம் உரத்தசிந்தனை"- ஆகஸ்ட் 2007)

வேற்றுமொழிச் சொல்லை விலக்கு

காலக் கணக்கிலையாம் கன்னித் தமிழ்பிறப்பு
நூலறிந்தோர் செம்மொழியென் றேத்திடும் - பாலனைய
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்று மொழிச் சொல்லை விலக்கு.

(எழுதியது: 23-7-2007 திங்கள் பிற்பகல் 2.25 மணி)
(வெளியானது: "மீண்டும் கவிக்கொண்டல்" ஆகஸ்ட் 2007)

(செந்தமிழ்போல் பாரதனில் செம்மைமொழி ஒன்றில்லை
இந்தவுரை எக்காலும் ஏற்றமுறும் - பொற்றொடியாய்
ஆற்றுநீர் சாக்கடையாய் ஆக்கல் முறையாமோ
வேற்றுமொழிச் சொல்லை விலக்கு.)
                                             

குறள் வெண்பா

வீட்டு விலங்காய் விளங்கும்நாய் நன்றியினைக்
காட்டுதல்போல் யாதுள தீங்கு?

(எழுதியது;ஜூலை 23, 2007 திங்கள் காலை 11.55 மணி. அலுவலகம்)
(வெளியானது;" நற்றமிழ்"-ஆகஸ்ட் 2007)

கண்டு வணங்கும் கனல்

சத்தியத்தின் தோற்றம் சான்றாண்மைக் குள்ளடக்கம்
கத்துகடல் போற்றிடும் கற்புநெறி - புத்தொளியாம்
உண்டு மகிழ உணவாக்கும் எந்நாளும்
கண்டு வணங்கும் கனல்!

(புத்தொளியால்-என்றும் மாற்றலாம்) (வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2007.-பக்கம் 48)

வியாழன், 10 ஜூலை, 2014

புலவர் நெல்லை ஆ.கணபதி

நெல்லை கணபதியின் நீண்ட கவிச்சோலை
எல்லை யிலாதுயர்ந் தேற்றமுறும் - மெல்லியலாய்
தீங்கனிகள் வாசமலர் தேனடைகள் நற்சுனைநீர்
ஆங்கிருக்கும் நீசுவைத்துப் பார்!

(எழுதியது ஜூலை 3,  2007 செவ்வாய் .பிற்பகல் 2.47 மணி. அலுவலகம்)

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ எம்பார் ஜீயர்

சீர்பெரும் பூதூரின் செல்வத் திருமடத்தின்
பேர்சிறக்க வந்த பெருமகனார் - கூர்மதியார்
அப்பன் பரகால ராமா னுஜஎம்பார்
ஒப்பிலா ஜீயரென் றோது.

(எழுதியது ஜூலை 13, 2007 காலை 4.30 மணி. வீடு)

பெற்றதனால் வந்ததிந்தப் பேறு

தொல்காப்பி யம்நன்னூல் தூயகுறள் காப்பியங்கள்
பல்கும் கவிதைபல பார்போற்றும் - மெல்லியலாய்
நற்றமிழின் தேன்பருக நான் தமிழைத் தாய்மொழியாய்ப்
பெற்றதனால் வந்ததிந்தப் பேறு.

(வெளியானது "பன்மலர்" ஆகஸ்ட் 2007 பக்கம் 26)
(எழுதியது ஜூலை 16, 2007 காலை 10.15 மணி. அலுவலகம்)

அருமைநாதன் சேவை அன்பு வெளிப்பாடே!

தாய்மண்ணைக் காப்பதற்குத் தம்பொருளை இன்னுயிரை
ஆய்ந்த்தறியா தீந்தவர்கள் ஆயிரம்பேர் - நோய்நொடியால்
கொட்டடியில் துன்புற்றும் கொள்கைமா றாமறவர்
தொட்டடியைப் போற்றிடு வோம்.

தோழாநம் தாய்மொழியின் தூய்மைத் திறங்காண
ஏழேழ் தலைமுறையின் நூல்கற்பாய் - பாழாய்ப்
பிறமொழியின் தாள்பற்றும் பேராசை வேண்டா
அறநூலாம் வள்ளுவமே மேல்.

மேல்மக்கள் கீழ்மக்கள் என்கின்ற பேதமிலை
நாலிரண்டு கற்றறிந்த நம்மவரில் - ஆல்போலப்
பாவலர்கள் சேர்ந்தமரப் பாய்விரிக்கும் பேரரசு
நாவலராம் நம்மருமை யார்.

யாரென்று நோக்காமல் இன் தமிழில் வல்லவரைப்
பாரறியப் பராட்டிப் போற்றிடுவார் - சீரார்
அருமைநா தன்சேவை அன்பு வெளிப்பாடாம்
பெருமிதமே பெற்றிட்ட  தாய்.

("தாய்மண்" இதழ் 27 ஆவது ஆண்டுமலரில் வெளியானது)
(எழுதியது 13.6.2007 மதியம் 1 மணி. வீடு)

நாட்டின் நலனையே நாடு

வெள்ளிப் பனிமலையில் வீரர்பலர் நம்நாட்டை
எள்ளளவும் தூக்கமின்றிக் காக்கின்றார் - கள்ளமிலாய்
வீட்டில் பொருட்செல்வம் வேகமாய்ச் சேர்க்கும்நீ
நாட்டின் நலனையே நாடு.

(ஜூன் 12, 2007 செவ்வாய் மாலை 3.45 மணி. அலுவலகம். வெளியானது "பன்மலர்" வெண்பாப் போட்டி- ஜூலை 2007  பக்கம்: 26)

மழையே பொழிக மகிழ்ந்து

கோடையின் வெப்பம் கொடுமையாய் உள்ளதே
ஆடை பொசுங்கிட லானதே - மாடாய்
உழைப்பவர் மேனி உருக்குலை யாதோ
மழையே பொழிக மகிழ்ந்து.

(எழுதியது ஜூன் 11, 2007 காலை 11.20 மணி. அலுவலகம். வெளியானது: "பொதிகை மின்னல்" ஜூலை 2007)

விடைதேடு நெஞ்சே விரைந்து

ஏழேழ் பிறப்பினில் எத்துணையோ பாவங்கள்
கீழராய்ச் செய்து கிடந்தோமே - பாழாய்
முடைநாற்றம் வீசிடும் மும்மலங்கள் போக்க
விடைதேடு நெஞ்சே விரைந்து.
(11.6.2007 திங்கள் நண்பகல் 1 மணி. அலுவலகம்)

புதன், 9 ஜூலை, 2014

                        விடை தேடு நெஞ்சே விரைந்து                                                                              காமம் வெகுளி கடுஞ்சொல் சோம்பலை                                                                                நாமே முயன்று நசுக்கிடல் - ஆமோ                                                                                          அடைகாக்கும் கோழியாய் மீண்டும் வருமோ                                                                      விடைதேடு நெஞ்சே விரைந்து.                                                                                                   (எழுதியது  ஜூன் 11, 2007 காலை 10.45.அலுவலகம்.                                                    வெளியானது; அமுதசுரபி ஜூலை 2007)