பொற்பாதம் நெஞ்சமுறப் பொழுதெலாம் உனையெண்ணிப்
புலம்பிடும் சிறிய பிள்ளை
புடவையெழில் சேயெனவே போர்த்தியருள் செய்திட யான்
புண்ணியம் என்ன செய்வேன்?
இற்றுவிழும் இடையுடனே ஈசனுடன் நடனமிடும்
என்னம்மை நின்கருணையால்
இச்சை சுகம் உறவு பகை எனும் பெரிய பந்தத்தை
என்றைக்கு உதறி நிற்பேன்?
சொற்கேட்டு சம்பந்தன் சுடரறிவைத் தூண்டியநற்
சோதியே தாய் நெஞ்சமே
சொல்லொணாத் துயர் நெஞ்சைச் சுக்கலாய் ஆக்குமுனம்
சுகவிரல்க ளால்வருட வா!
கற்றவர்கள் சங்கமிடும் கவின்மதுரை மாநகரில்
கண்கொள்ளாக் காட்சி நீயே
கவனமுடன் இச்சிறுவன் விண்ணப்பம் ஏற்றிடுக
கருணை மீனாட்சி உமையே!
("உரத்தசிந்தனை" 26-ஆம் ஆண்டுமலர், பிப்ரவரி 2010)
வியாழன், 16 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக