வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

ஆனந்தத் தாண்டவம்

திரைகடல் வழங்கிடும் சங்கொலி முழங்கிட
              தேவர்கள் இசைபாட
   தித்தித் தோம்தம் தம்தம் எனமத்
               தள இசை நந்திதர

தரையினில் அடிபர வாதது போல்மணிச்
               சதங்கைகள் துதிபாடத்
     தகதக வெனுமொளி விரிசடை பரப்பிடத்
               தாவிக் குதித்தாடி

இருகரம் இணைந்துபி ரிந்துவி ரல்களில்
            எழும்பிடும் முத்திரைகள்
     இப்புவிபேசிடும் அத்துணை மொழிகளும்
              இயம்பிடும் மலர்விழிகள்

அரனுடன் உமையவள் அபிநய சுந்தரி
             ஆடிடும் எழிற்கோலம்
      அடியவர் மனந்தனை ஆனந்த வாரியில்
              ஆழ்த்திடும் தாண்டவமே!
                                                                         - அரிமா இளங்கண்ணன்

(14-3-2012 காலை 4.40 வீடு. நிறைவு மாலை 5.47.LC 407)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக