ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

உத்தமனா நீ?

குள்ளனாகச் சென்றந்த மாவலியிட மிரந்து
             கேட்டனை மூவடியில்மண்
    குறையொன்று மிலாதவன் கொடுக்கவும் வஞ்சனாய்க்
             கொற்றவன் சிரமழுத்தினாய்

கள்ளனென மறைந்திருந்து வாலியின் மார்புதனைக்
            கணையால் துளைத்திட்டனை
     கர்ணனின் உயிரனைய தருமத்தை யாசித்துக்
            காலனுக் கிரையாக்கினை

உள்ளமெலாம் அடியவர்கள் உனையே நினந்துருகும்
            ஒப்பற்ற மாமாயனே
     உன்தகுதிக் கிவையெலாம் ஒக்குமோ கண்ணனே
             உத்தமன் நீயாவையோ?

எள்ளிநகை யாடிடும் மானிடா மெய்மையும்
            வாய்மையாம் நன்மைதரின்
      இவ்வுலகத்தில்  தருமத்தை நிலைநாட்ட வேறுவழி
             எனக்கொன்றும் தோன்றவிலையே!

                                                                - அரிமா இளங்கண்ணன்

(வெளியானது:'உரத்த சிந்தனை" 30-ஆவது ஆண்டு மலர்.
ஆண்டுவிழா நிகழ்வு:9-3-2014.சந்திரசேகர் திருமண மண்டபம்
மேற்கு மாம்பலம், சென்னை.33)
         


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக