ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

உயிரின் விலை இதுதானா?

பானை உடைஞ்சிருச்சு பாலெல்லாம் கொட்டிருச்சு
தீநாக்கு வந்தல்லோ தெய்வத்தைத் தீண்டிருச்சு
தோணியிலே போனமச்சான் துள்ளி வருவார்னு
ஆனமட்டும் காத்திருந்தேன் அய்யோன்னு போனாரே!

மத்திமீன் வலைவீசி மலையளவு கிடைக்கு மின்னார்
மத்தியிலே சுட்டுப்புட்டான் மனம்ஒடைஞ்சு போனதையா
காக்காமீன் கெளுத்திமீன் கடலெல்லாம் கெடைக்கு மின்னார்
சாக்காடு வந்ததையா சரமாரி குண்டுகளா1

கெண்டைமீன் போல கிளியேஉன் கண்ணுன்னு
மண்டபத்துத் தொறப்பக்கம் மனசாரச் சொன்னவனே
கண்டாங்கிச் சீலையிலே கருப்பாயி ஒம்போல
உண்டாடி பொண்ணுகன்னு ஊரறியச் சொன்னவனே!

பிச்சிப்பூ வாங்கிவந்து பிரியமுடன் சூட்டிவைப்பே
கச்சத்தீ வடுத்த கடும்பாவி சுட்டுப்புட்டான்
சின்னஞ் சிறுகளை சீரழிய விட்டுப்புட்டு
சிலோன்காரன் உன் ஒடம்பை சல்லடையாய் துளைச்சுட்டான்!

சண்டைக்கு நான்போறேன் சட்டுன்னு வெட்டிடுவேன்
தொண்டைச் சங்கறுத்துத் தொடைரெண்டை ஒடைச்சிடுவேன்
கக்கத்தில்  அரிவாளைக் கணக்காநான் எடுத்துவச்சேன்
சர்க்காரு விசயமுன்னு சாதிசனம் தடுக்குதையா!

மீன்பிடிக்கப் போறவுக மீனோட திரும்பட்டும்
மின்னட்டாம் பூச்சிகளா பிள்ளைகுட்டி காத்திருக்க
நான்பட்ட கஷ்டமெல்லாம் நாளக்கிப் படவேண்டாம்
நாட்டாரே ஏழைக்கு நல்லவழி சொல்லுமையா!

கடல்மேல் பிறந்து கண்ணீரில் மிதக்கும் மீனவர், சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை எண்ணி வேதனையோடு புலம்பித் தவிக்கும் மனக்குமுறலை வெளிப்படுத்தும் வீரியக் கவிதை......

என்று பாராட்டிக் கட்டம் கட்டி வெளியிட்டது "மாலை முரசு" நாளிதழ்.         தேதி  9-12-2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக